"யான் நின்வயின் பெறுவது ஈது" (1381) என்று சொல்வானேயானால் மைந்தன் வாய் திறப்பதற்கு வழியே இல்லாமல் போய்விடுகிறது. இந்த நிலையில் இராகவனுடைய மனநிலை என்ன என்பதைச் சொல்ல வருகின்ற கம்பன் மிக அற்புதமானஒருபாடலைப் பாடுகின்றான். அனைவரும் அறிந்ததுதான் அந்தப் பாடல். என்றாலும் அதிலுள்ளஒருசில சொற்கள் ஆழ்ந்து சிந்திப்பதற்குரியனவாகும். ‘தாதை அப் பரிசு உரைசெய தாமரைக் கண்ணன்’ (1382) தந்தையாகிய தசரதன் பதினான்கு பாடல்களில் விரிவாகப் பேசி, ‘நீ இந்த வரத்தைத்தருவாயா’என்றவுடன் , தாமரைக் கண்ணன் - இராகவன் ‘காதல் உற்றிலன் இகழ்ந்திலன்’ (1382) பட்டம் வருகிறது என்பதற்காக அதை விரும்பவும் இல்லை. அதை இகழ்ந்து நோக்கவும் இல்லை. "கடன் இது என்று உணர்ந்தும் யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ நீதி எற்கு? என நினைந்தும் அப்பணி தலைநின்றான்." (1382) என்கிறார். "கடன் இது என்று உணர்ந்து" (1382) என்ற சொல்லுக்கு ‘பட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் தனக்குக் கடமை என்று நினைத்து’என்று பலரும் பொருள் எழுதியிருக்கிறார்கள். ஆனால், அவ்வாறு பொருள் செய்வதிலுள்ள இடர்ப்பாட்டைச்சந்திக்க வேண்டும். ‘இதுதான் தன்னுடைய கடமை என்று உணர்ந்துவிட்டான் இராகவன், ’ என்று கூறினால் "யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ ‘நீதி எற்கு’ என நினைந்து" (1382) ‘சக்கரவர்த்தியின் ஆணை எதுவோ அதன் வழி நிற்பது நீதி’, என்று கூறுவது ‘நின்று வற்றுவதாக’முடிந்துவிடும். கடமை என்ற முடிவுக்கு வந்துவிட்ட பிற்பாடு, ‘அரசன் என்ன ஆணையிட்டானோ அதனைச்செய்வதுதான் தனக்கு முறை, நீதியாகும் முடிவுக்கு வந்துவிட்ட பின்னர், அரசன் என்ன ஆணையிட் |