கடவுள் வாழ்த்து

 கலிவிருத்தம்

3708. மூன்று உரு எனக் குணம்
     மும்மை ஆம் முதல்,
தோன்று உரு எவையும்,
     அம் முதலைச் சொல்லுதற்கு
ஏன்று உரு அமைந்தவும்,
     இடையில் நின்றவும்,
சான்றவர் உணர்வினுக்கு
     உணர்வும், ஆயினான்.

     மூன்று உரு என - மூன்று உருவங்கள் உடைமைபோல;
மும்மைக்குணம்ஆம் -மூன்று குணங்களை உடைய; முதல் -முழுமுதற்
கடவுள்; தோன்று உரு எவையும் - தோன்றிய தத்துவங்கள் அனைத்துமாய்;
அம்முதலைச் சொல்லுதற்கு - அந்த முதற்கடவுளை (பெயரும் உருவமும்
கொடுத்து)ச் சொல்லும்படி; ஏன்று உரு அமைந்தவும் - பொருந்தி,
வடிவமைந்த உலகங்களாய்; இடையில் நின்றவும் - அவ்வுலகிடைப்
புகுந்துநின்ற உயிர்களாய் (ஆனவன்); சான்றவர் - சான்றோர் (ஞானிகளின்);
உணர்வினுக்கு - : உணர்வும் ஆயினான் - உணரப்படும் பொருளும்
ஆனவன்.

     அனைத்துமாய் விளங்கும் இறை இயல்பு ஈண்டு உணர்த்தப்பட்டது.
மூன்று உரு என்பது பிரமன், திருமால், சிவபிரான் என்னும் தெய்வங்களைக்
குறிக்கும்.  மும்மைக்குணம் - மூன்று குணங்கள் - சாத்துவிகம், இராசதம்,
தாமதம் என்பன. மூன்று உரு அமைந்து மும்மைக் குணங்களுடன் விளங்கும்
இறைநிலையை ''மூன்று கவடாய் முளைத்தெழுந்த மூலமோ?'' (3682) என்ற
கவந்தன் கூற்றாலும் ''மூவகை உலகுமாய், குணங்கள் மூன்றுமாய்'' (6251)
''மூன்று அவன் குணங்கள், செய்கை மூன்று, அவன் உருவம் மூன்று'' (6310)
என்ற பிரகலாதன் உரைகளாலும் கம்பர் முன்னரும் பின்னரும் கூறுதல்
காண்க.

     'தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை' என்பர்
நம்மாழ்வார். (திருவாய்மொழி 8-8-4). யாவையும் எவருமாய் விளங்கும்
இறைவன் இயல்பை ''அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ'' எனப்
பரிபாடலும் (3-68) 'உடல் மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துள்ளான்
(திருவாய்மொழி 1-1-7) என நம்மாழ்வார் கூறுவதும் ஒப்பு நோக்கத்தக்கன.

     'முப்பரம் பொருளுக்கு முதல்வன்' (314) என்றும், 'மூவருந்திருந்திடத்
திருத்தும் அத்திறலோன்' (1349) என்றும் இராமனைப் போற்றும் கம்பர்.
இராமனே மும்மூர்த்தியும் ஒன்றாய் அமைந்த பரம்பொருள் என்றும்
உணர்த்துவார். 'சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை, ஆலமும்
மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்'' (5884) என்பது
அனுமன் கூற்றாகும்.

     இறைவன் தன்னை உணரவல்ல அடியார்க்கு உணரப்படும்
பொருளாதலை ''என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற'' (திருவாய்மொழி-
8.8.4) என்பதாலும் அறியலாம்.  ''சித்து என அருமறைச் சிரத்தின் தேறிய,
தத்துவம் அவன், அது தம்மைத் தாம் உணர்வித்தகர் அறிகுவர்'' (6249)
என்னும் பிரகலாதன் கூற்று காண்க.

     திரிமூர்த்திகள் பரம்பொருளின் அம்சம் என்பதும், தத்துவங்களும்,
உலகங்களும், உயிர்களும் பரம்பொருளின் உண்மையைத் தெரிவிப்பனவே
என்பதும் பாடற்பொருளாகும்.

     'உரு' என்னும் சொல் பாடலில் பல இடங்களில் வருவதால் சொற்பின்
வருநிலை அணியாகும்.