3712. | ஓத நீர் உலகமும், உயிர்கள் யாவையும், வேதபாரகரையும், விதிக்க வேட்ட நாள், சீதம் வீங்கு உவரியைச் செகுக்குமாறு ஒரு காதி காதலன் தரு கடலின் அன்னது; |
ஒரு- ஒப்பற்ற; காதி காதலன்- காதி என்னும் அரசனின் மகனாகிய விசுவாமித்திரர்; ஓதநீர் உலகமும் - குளிர்ந்த கடலால் சூழப் பட்ட உலகத்தையும்; உயிர்கள் யாவையும் - அவ்வுலகில் வாழும் உயிர்களையும்; வேத பாரகரையும் - வேதங்களைக் கரைகண்டவர்களான முனிவர்களையும்; விதிக்க வேட்ட நாள் - (திரிசங்கு அரசனுக்காக) படைக்க விரும்பிய காலத்தில்; சீதம் வீங்கு உவரியை - (நான்முகன் படைத்த) குளிர்ச்சி மிக்க உப்புக்கடலை; செருக்குமாறு - வெல்லுமாறு; தரு கடலின் அன்னது - படைத்த நன்னீர்க்கடலை ஒத்திருக்கும். பொய்கை இனிய நீரைப் பெற்றிருத்தலால் உப்புக்கடலுக்கு மாறாகப் பூமியினிடைப் படைத்த நன்னீர்க்கடலை ஒத்தது எனப்பட்டது. காதி காதலன் - காதியின் அன்பிற்கு உரியவன்; விசுவாமித்திரர். வேதபாரகர் - வேதங்களை ஐயந்திரிபறக் கற்றுப் பிறர்க்கு ஓதுவிக்கவும் வல்லவர். முன்னர் 'உவரி' என்றமையால் பின்னர் வரும் கடல் 'நன்னீர்க் கடல்' என்னும் பொருளில்வந்தது. 4 |