3714.களம் நவில் அன்னமே முதல,
     கண் அகன்
தள மலர்ப் புள் ஒலி
     தழங்க, இன்னது ஓர்
கிளவி என்று அறிவு
     அருங் கிளர்ச்சித்து; ஆதலின்,
வள நகர்க் கூலமே
     போலும் மாண்பது.

     கண் அகன் - இடமகன்ற; தளமலர் - இதழ்களையுடைய தாமரை
மலர்களில் இருக்கின்ற; களம் நவில் - இனிதாகக் கூவுகின்ற; அன்னமே
முதல -
அன்னங்கள் முதலான; புள்ளொலி - பறவைகளின் ஒலி; தழங்க-
மிகுதியாக ஒலிக்க; இன்னது ஓர் கிளவி என்று - இன்ன பறவையின் ஒலி
இஃது என்று; அறிவு அரும் கிளர்ச்சித்து - அறிய முடியாத எழுச்சியினை
உடையது; ஆதலின் - அதனால்; வளநகர்க் கூலமே போலும்-
(அப்பொய்கை) செல்வம் மிக்க பெரிய நகரங்களில் காணப்படும் கடைவீதியை
ஒத்திருக்கும்; மாண்பது - சிறப்பினை உடையது.

     பொய்கைக்கு வளநகர்க்கூலமும், பொய்கையில் எழுந்த பறவைகளின்
ஒலிக்கு நகரக்கடைத்தெருக்களில் கொள்வாரும் கொடுப்பாருமாய் எழுப்பும்
ஒருங்கெழுந்த பேச்சொலியும் உவமைகளாம்; உவமை அணி.

     களம்;  இன்னோசை. 'களங்கொள் திருநேரிசை' (திருநாவுக்கரசர் 337)
என்பது பெரியபுராணம். சிறப்புக்கருதி 'மலர்' என்பது தாமரையைக் குறித்தது.
ஏகாரம் இரண்டும் இசைநிறை. ''பல்வேறு புள்ளின் இசை எழுந்தற்றே,
அல்லங்காடி அழிதரு கம்பலை'' (மதுரைக்காஞ்சி. 543 - 544), 'பலவும்
எண்ணில குழீ இச், சிரம் சிறிதசைத்தும், சிறகையடித்தும் அந்தியங்காடியின்
சந்தம் காட்டி' (மனோன்-2-1-122-124) என்ற அடிகள் ஒப்புநோக்கத்தக்கன.  6