3721.ஆரியம் முதலிய பதினெண் பாடையில்
பூரியர் ஒரு வழிப் புகுந்தது ஆம் என,
ஓர்கில கிளவிகள் ஒன்றோடு ஒப்பு இல,
சோர்வு இல, விளம்பு புள் துவன்றுகின்றது;

     ஆரியம் முதலிய - வடமொழி முதலான; பதினெண் பாடையில் -
பதினெட்டு மொழிகளில்; பூரியர்- புலமை இல்லாத புல்லறிவாளர்; ஒருவழி-
ஓரிடத்தில்; புகுந்தது ஆம் என - கூடி ஆரவாரிப்பது போல; ஓர்கில
கிளவிகள் -
(இன்ன பறவையின் குரல் என) ஆராய்ந்து அறிதற்கியலாத
ஒலிகள்; ஒன்றோடு ஒப்பு இல- ஒன்றோடொன்று தொடர்பு இல்லாதவனாய்;
சோர்வு இல விளம்பும்
- ஓய்தலின்றி ஒலிக்கும்; புள் துவன்றுகின்றது -
பறவைகள் நெருங்கியிருக்கப் பெற்றது. (அப்பொய்கை).

     ஆரியம் முதலிய மொழிகளில் புலமை இல்லாதவர்கள் ஓரிடத்திலிருந்து
எவர்க்கும் புரியாத வகையில் ஆரவாரிப்பது போலப் பல்வேறு பறவைகள்
பொய்கையில் ஒருங்கிருந்து பிரித்து உணர முடியாத வகையில் ஓய்வில்லாது
ஒலித்தன; உவமை அணி; பல பறவைகளின் குரல் தெளிவாகப் பிரித்து அறிய
முடியாது இருப்பதால், பலபகுதிகளிலிருந்து பல மொழி பேசுவோரின்
ஆரவாரத்தை உவமையாக்கினார். ஆரியம் - வடமொழி; பாடை - பாஷா
என்னும் வட சொல்லின் திரிபு; கிளவி - பேச்சு - ஒலி; விளம்புதல் -
பேசுதல்- ஒலித்தல்; புள் - பறவை. பறவைகளின் ஒலிகளுக்கு மொழிகள்
ஒலிகள்(சீவக 93) பூரியர் - தம்மைப் பெரியராய்க் கருதும் அற்பர். 'சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து' என்பது குறள் (978)                   13