3723. | ஈறு இடல் அரிய மால் வரை நின்று ஈர்த்து இழி ஆறு இடு விரை அகில் ஆரம் ஆதிய ஊறிட, ஒள் நகர் உரைத்த ஒண் தளச் சேறு இடு பரணியின் திகழும் தேசது. |
ஈறு இடல் அரிய - (அப்பொய்கை) எல்லை கூற இயலாத; மால்வரை நின்று - பெரிய மலையிலிருந்து; ஈர்த்து இழி - இழுத்துக் கொண்டு இறங்கிவரும்; ஆறு இடு - அருவிகள் இட்ட; விரை அகில் - மணம் மிக்க அகில்; ஆரம் ஆதிய - சந்தனம் முதலிய (வாசனை மரங்கள்); ஊறிட - (நீரில்) ஊறப்பெறுதலால்; ஒள்நகர் உரைத்த - செல்வம் மிக்க நகரமக்கள் அரைத்த; ஒண்தளச்சேறு - ஒள்ளிய சந்தனக்குழம்பை; இடு பரணியின் - இட்டு நிரப்பிய சந்தனக்கிண்ணம் போன்று; திகழும் தேசது - விளங்கும் ஒளியுடையது. மலை அருவிகளால் கொண்டுவரப்பட்ட மரங்கள் தேய்ந்து ஊறியதால் அப்பொய்கை கலவைச்சந்தனம் கூட்டி வைத்திருக்கும் கிண்ணத்தை ஒத்து விளங்கியது; இஃது உவமை அணி. பொய்கைக்குப் பரணியும், அதிலுள்ள மரங்களின் தேய்வையால் குழம்பிய நீர்க்குச் சந்தனக் குழம்பும் உவமைகளாம். நகரத்திற்கு உரிய சந்தனம் என்பதால் 'ஒள்நகர் உரைத்த' எனப்பட்டது. செல்வமுடைய நகரமக்களே சந்தனம் முதலிய மணப்பொருள்களைக் கொண்டு இன்பம் நுகர்வர். பரணி - சந்தனக் கிண்ணம்; நகர் - இடவாகுபெயர். தளம் - சீதளம் என்பதன் முதல் குறை, ''வெண்டளக் கலவைச்சேறு' என்பது நாட்டு வருணனை.(43) 15 |