3725.கவள யானை அன்னாற்கு, 'அந்தக்
     கடி நறுங் கமலத் -
தவளை ஈகிலம்; ஆவது செய்தும்'
     என்று அருளால்,
திவள அன்னங்கள் திரு நடை
     காட்டுவ; செங் கண்
குவளை காட்டுவ; துவர் இதழ்
     காட்டுவ குமுதம்.

     கவள யானை அன்னாற்கு - கவளங் கவளமாக உண்ணும்
இயல்புடைய யானையை ஒத்த இராமபிரானுக்கு; அந்தக் கடிநறும்
கமலத்தவளை -
அந்த மணம்மிக்க செந்தாமரை மலரிலுள்ள திருமகளை
(சீதையை); ஈகிலம் - கொண்டு வந்து சேர்க்கும் திறமை இல்லோம்; ஆவது
செய்தும் -
(எனினும்) இயன்ற உதவியைச் செய்வோம் என்று; அருளால் -
இரக்கத்தால்; அன்னங்கள் - (அப் பொய்கையில் உள்ள) அன்னங்கள்;
திவள -
துவளும்படியாக; திரு நடை காட்டுவ - (சீதையின்) நடையழகைக்
காட்டுவனவாயின; குவளை - குவளை மலர்கள்; செங்கண் காட்டுவ -
செவ்விய கண்களின் அழகைக் காட்டுவனவாயின; குமுதம் - குமுதமலர்கள்;
துவர் இதழ் காட்டுவ -
செந்நிறம் வாய்ந்த இதழின் அழகைக்
காட்டுவனவாயின.

     சீதையைக் கொண்டு வந்து சேர்க்கும் திறன் இல்லாததால், இயன்ற
உதவியைச் செய்வோம் எனக்கருதி அன்னங்கள் சீதையின் நடையழகையும்,
குவளை விழியழகையும், குமுதம் இதழழகையும் காட்டின.

     யானை அன்னான் - இராமன்.  கம்பீரமான தோற்றம், நடை, வலிமை
பற்றி யானை உவமையாயிற்று.  திருமகளே சீதையாக அவதரித்ததால்
'கமலத்தவள்' எனப்பட்டனள்.  ''போதினை வெறுத்து அரசர் பொன்மனை
புகுந்தாள்'' என்றார் முன்னரும்.  (1151) கவளம் : வாயளவு கொண்ட
உணவுத்திரள். பாடல் தற்குறிப்பேற்ற அணி.                         17