3727. | ஏலும் நீர் நிழல், இடை இடை எறித்தலின், படிகம் போலும் வார் புனல் புகுந்துளவாம் எனப் பொங்கி, ஆலும் மீன் கணம் அஞ்சின அலம்வர, வஞ்சிக் கூல மா மரத்து, இருஞ் சிறை புலர்த்துவ - குரண்டம். |
ஏலும் நீர் - பொருந்திய நீரில்; நிழல் இடை இடை எறித்தலின் - (மரங்களிலுள்ள கொக்குகளின்) நிழல் இடையிடையே விளங்குதலாலே; படிகம் போலும் வார்புனல் - பளிங்கு போன்று விளங்கும் மிக்க நீரினுள்; புகுந்துளவாம் என - (கொக்குகள் தம்மை உண்ணப்) புகுந்துள்ளன என்று எண்ணி; பொங்கி ஆலும் மீன்கணம் - (இயல்பாகத்) துள்ளி விளையாடும் மீன் கூட்டங்கள்; அஞ்சின அலம்வர - அஞ்சி வருத்தமடையுமாறு; குரண்டம் - கொக்குகள்; வஞ்சிக் கூலமா மரத்து - கரையிலுள்ள பெரிய வஞ்சி மரத்திடை; இருஞ்சிறை புலர்த்துவ - (தம்) பெரிய சிறகுகளை உலர்த்திக் கொண்டிருப்பனவாயின. கரையருகே உள்ள மரங்களில் கொக்குகள் தம் சிறகுகளை உலர்த்திக் கொண்டிருக்க, அவற்றின் நிழல் நீரில்பட, அந்நிழலைக்கண்ட மீன்கள் தம்மை உண்பதற்காக நீரினுள் கொக்குகள் புகுந்துவிட்டன என்றெண்ணி மயங்கின என்பதாம்; மயக்க அணி. தெளிவுடைமை பற்றிப் பளிங்குபோலும் புனல் என்றார். குரண்டம் - கொக்கு; கூலம் - கரை; வஞ்சி - மரவகையுள் ஒன்று. 19 |