3728.அங்கு ஓர் பாகத்தில், அஞ்சனமணி
     நிழல் அடைய,
பங்கு பெற்று ஒளிர் பதுமராகத்து
     ஒளி பாய,
கங்குலும் பகலும் மெனப்
     பொலிவன கமலம்;
மங்கைமார் தட முலை எனப்
     பொலிவன, வாளம்.

     அங்கு ஓர் பாகத்தில் - அப்பொய்கைக் கரையின் ஒரு பக்கத்தில்;
அஞ்சன மணி நிழல் அடைய -
நீலமணியின் ஒளி படிவதாலும்; பங்கு
பெற்ற ஒளிர் பதுமராகத்து ஒளி பாய -
மற்றொரு பகுதியில்
பதுமராகத்தின் ஒளி பாய்வதாலும்; கமலம் - தாமரை மலர்கள்; கங்குலும்
பகலும் எனப் பொலிவன -
இரவு போலவும் பகல் போலவும் (ஒரே
சமயத்தில்) அழகுடன் விளங்கின; வாளம் - இணையாக உள்ள சக்கரவாகப்
பறவைகள்; மங்கையர் தடமுலை எனப் பொலிவன - பெண்களின் பெரிய
தனங்களைப் போல அழகுபெற்றன. 

     இருளில் குவிவதும், ஒளியில் மலர்வதும் தாமரையின் இயல்பு; நீல
மணியின் காரொளி படும் பகுதியில் குவிந்தும், பதுமராகத்தின் செவ்வொளி
படும் பகுதியில் மலர்ந்தும் தாமரைகள் விளங்கின என்கிறார். இணை பிரியாத்
தன்மை கொண்ட சக்கரவாகப் பறவைகள் மகளிர் மார்பகம் போலப்
பொலிந்தன என்கிறார்.

     பகலும்மென - விரித்தல் விகாரம்.                            20