3733. | விரிந்த குவளை, சேதாம்பல், விரை மென் கமலம், கொடி வள்ளை, தரங்கம், கெண்டை, வரால், ஆமை என்று இத்தகையதமை நோக்கி, 'மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நிற் கண்டேன்; வல் அரக்கன், அருந்தி அகல்வான் சிந்தினவோ? ஆவி! உரைத்திஆம் அன்றே! ' |
விரிந்த குவளை- மலர்ந்த கருங்குவளை மலர்களும்; சேதாம் பல்- செவ்வாம்பல் மலர்களும்; விரைமென் கமலம்- மணம்மிக்க மென்மையான தாமரை மலர்களும்; கொடி வள்ளை - வள்ளைக் கொடியின் இலைகளும்; தரங்கம் - அலைகளும்; கெண்டை - கெண்டைமீன்களும்; வரால் - வரால் மீன்களும்; ஆமை - ஆமைகளும்; என்று இத்தகையதமை- என்னும் இத்தன்மையானவாகிய பொருள்களை; நோக்கி - (இராமன்) பார்த்து; ஆவி- பொய்கையோ!; மருந்தின் அனையாள் - அமுதம் போன்ற சீதையின்; அவயவங்கள் - (கண், வாய், முகம், காது, வயிற்று, மடிப்பு, கணைக்கால், புறவடி ஆகிய) உறுப்புகளை; நின் கண்டேன் - உன்னிடத்துப் பார்த்தேன்; அவை - அவ்வுறுப்புகள்; வல்லரக்கன் - கொடிய அரக்கனாகிய இராவணன்; அருந்தி - உண்டு; அகல்வான் - (பரந்த ஆகாயத்தில்) செல்கையில்; சிந்தினவோ- சிந்தினவைகளோ? உரைத்தி - உரைப்பாயாக. (ஆம், அன்று, ஏ - அசைகள்.) குவளை, ஆம்பல், கமலம், வள்ளை, அலை, கெண்டைமீன், வரால்மீன், ஆமை என்பன முறையே கண், வாய், முகம், காது, வயிற்றுமடிப்பு, கணைக்கால், புறஅடிக்கு உவமையாயின. கொடியும் வள்ளையும் என இரண்டாகக் கொள்ளின் கொடியால் இடையும் வள்ளையால் காதும் குறிக்கப்படும். பொய்கை மலர்களைப் பெண்கள் உறுப்புகளுக்குச் சொல்வதைப் ''பைங்குவளைக் கார்மலரால்'' (திருவெம்பாவை 13) என்ற அடியும் உணர்த்தும். குவளை முதலியவற்றைச் சீதையின் உறுப்புகளாக மயங்கினன் என்பதால் மயக்க அணி. குவளை முதலியவற்றை அரக்கன் உண்கையில் சிந்திய சீதையின் அவயவங்களாகக் கருதினன் என்பதால் தற்குறிப்பேற்ற அணி. சீதையின் அருமை பற்றி 'மருந்தின் அனையாள்' என்றார். 25 |