3735. | 'அடையீர்எனினும் ஒரு மாற்றம் அறிந்தது உரையீர்; - அன்னத்தின் பெடையீர்! - ஒன்றும் பேசீரோ? பிழையாதேற்குப் பிழைத்தீரோ? நடை நீர் அழியச் செய்தாரே நடு இலாதார்; நனி அவரோடு உடையீர் பகைதான்; உமை நோக்கி உவக்கின்றேனை முனிவீரோ? |
அன்னத்தின் பெடையீர் - பெண் அன்னங்களே! அடையீர் எனினும்- என்னிடத்து வரமாட்டீராயினும்; ஒரு மாற்றம் அறிந்தது உரையீர் - (சீதையைப்பற்றி) நீங்கள் அறிந்ததொரு வார்த்தையாயினும் சொல்லுங்கள்; ஒன்றும் பேசீரோ - (என்னிடம்) ஒன்றும் பேச மாட்டீர்களோ?; பிழையாதேற்கு- உங்களுக்கு ஒரு குற்றமும் புரியாத எனக்கு; பிழைத்தீரோ - பிழை செய்வீர்களோ?; நடு இலாதார் - இடையில்லாத சீதாபிராட்டியாரே; நடை நீர் அழியச் செய்தாரே- நீங்கள் நடையழகில் தோல்வியடையுமாறு செய்தார்; அவரோடு தான் நனி பகை உடையீர்- அவரோடுதான் நீங்கள் மிக்க பகைமை உடையவர் ஆவீர்; உமை நோக்கி உவக்கின்றேனை - உங்களை நோக்கி (உங்கள் நடை சீதை நடையை ஒக்கும் என்றெண்ணி) மகிழ்கின்ற என்னை; முனிவீரோ - வெறுப்பீர்களோ? மாற்றம் - சொல்; நடை - நடையழகு. உங்கள் நடையைத் தன் நடையழகால் தோற்கச் செய்த சீதை மாட்டுப் பகைமை கொள்வது முறையாகும். ஒரு பிழையும் செய்யாமல் உங்கள் நடையை நோக்கி மகிழ்கின்ற என்னிடத்தும் பகைமைகொண்டு அருகில் வராதாதும், ஆறுதலாக ஒன்றும் பேசாததும் தகுதியாமோ என்பதாம். பெடையார் - திணைவழுவமைதி. சீதையின் இடை பற்றி ''மருங்கு இலா நங்கை'', ''இல்லையே நுகப்பு'' என முன்னரும். (517, 728)கூறுவர். 27 |