3738.'அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு,
     அடைவு உண்டு அன்றோ? - கொடி வள்ளாய்!
மலர்க் கொம்பு அனைய மடச் சீதை
     காதே; மற்று ஒன்று அல்லையால்;
பொலக் குண்டலமும், கொடுங் குழையும்,
     புனை தாழ் முத்தின் பொன்- தோடும்,
விலக்கி வந்தாய்; காட்டாயோ?
    இன்னும் பூசல் விரும்புதியோ?

     கொடிவள்ளாய் - வள்ளைக் கொடியே!மலர்க்கொம்பு அனைய -
பூங்கொம்பைப் போன்ற; மடச் சீதை - மடமைக் குணம் பொருந்திய
சீதையின்; காதே - காதே ஆவாய்; மற்று ஒன்று அல்லை ஆல் -
பிறிதொன்றில்லை; ஆதலால்; அலக்கண் உற்றேற்கு - (சீதையைப் பிரிந்து)
துன்புறும் எனக்கு; உற்று உதவற்கு - நெருங்கிய உதவுதற்கு; அடைவு
உண்டு அன்றோ
- இயைபு உண்டு அல்லவா? பொலக்குண்டலமும் -
(அங்ஙனமிருக்கவும்) பொன்னால்செய்த குண்டலத்தையும்; கொடுங்குழையும்-
வளைந்த காதணியையும்; புனை தாழ்முத்தின் பொன்தோடும் - அழகிய
தொங்குகின்ற முத்துக்களை உடைய பொன்தோட்டினையும்; விலக்கி வந்தாய்
-
நீக்கி வந்தாய்; காட்டாயோ?- (அவற்றை அணிந்து) காட்டமாட்டாயா?;
இன்னும் பூசல் விரும்புதியோ -
மேலும் பகையினை விரும்புவாயோ?

     'நீ வடிவத்தால் சீதையின் காதை ஒத்திருப்பதால் குண்டலம், குழை,
தோடு ஆகியவற்றை அணிந்திருப்பின், நான் உன்னைக் கண்டு ஒருவாறு
ஆறுதல் அடைந்திருப்பேன்.  நீ அவற்றை நீக்கி வந்தாய்; காதுகளால் சீதை
உனது அழகை அழித்தாள் என்ற பழம் பகைமைகொண்டு துன்புற்று வருந்தும்
எனக்கு உதவாமல் இருப்பது விரும்பத்தக்கதன்று' என்று இராமன்
வள்ளைக்கொடியொடு வருந்தினான்.

     அலக்கண் - துன்பம்; சீதையின் பிரிவால் ஏற்பட்டது; மலர்க்கொம்பு -
கொம்பு மேனிக்கும், மலர் - கண், கை, கால், முகம் முதலிய
உறுப்புக்களுக்கும் உவமை; மடமை - எல்லாம் அறிந்தும் அறியாதது
போலிருக்கும் தன்மை; குண்டலம், குழை, தோடு என்பன மகளிர் காதணிகள்.
குழை - தளிர் வடிவமான காதணி.  தொங்கட்டான்என்பர்.            30