மாலைக் கடன் முடித்தல் 3742. | ஆண்டு, அவ், வள்ளலை, அன்பு எனும் ஆர் அணி பூண்ட தம்பி, 'பொழுது கழிந்ததால்; ஈண்டு இரும் புனல் தோய்ந்து, உன் இசை என நீண்டவன் கழல் தாழ், நெடியோய்! ' என்றான். |
ஆண்டு - அப்பொழுது; அன்பு எனும் ஆர் அணிபூண்டதம்பி - அன்பு என்னும் அரிய அணிகலனை அணிந்த தம்பியாகிய இலக்குவன்; அவ்வள்ளலை - வள்ளலாகிய இராமனைப் பார்த்து; 'நெடியோய் - பெரியோய்!பொழுது கழிந்தது ஆல் - பொழுது போயிற்று ஆதலால்; ஈண்டு இரும்புனல் தோய்ந்து- இப்பொழுது இப்பொய்கை நீரில் மூழ்கி; உன் இசையென நீண்டவன் - உன் புகழைப் போல வளர்ந்த திருமாலின்; கழல் தாழ் - திருவடிகளை வணங்குவாயாக'; என்றான் - என்று வேண்டினான். பொழுது கழிந்தது அறியாது இராமன் வருந்த, இலக்குவன் இவ்வாறு கூறினான். பிற அணிகள் உடம்பை அழகு செய்ய, அன்பு எனும் அணி உயிரை அழகு செய்கிறது. அணி - காரணப்பொதுப்பெயர். 34 |