சந்திரன் உதயம்

3746.அந்தியாள் வந்து தான்
     அணுகவே, அவ் வயின்
சந்த வார் கொங்கயாள்
     தனிமைதான் நாயகன்
சிந்தியா, நொந்து தேய் பொழுது,
     தெறு சீத நீர்
இந்து வான் உந்துவான், எரி
     கதிரினான் என.

     அந்தியாள் - அந்திப்பொழுதாகிய பெண்; வந்துதான் அணுகவே -
வந்து சேரவே; அவ் வயின் - அப்போது; சந்தவார் கொங்கையாள் -
அழகிய கச்சணிந்த தனங்களை உடைய சீதை; தனிமைதான்- பிரிந்து
தனியே இருக்கும் நிலையினை; நாயகன் சிந்தியா - இராமன் நினைத்து;
நொந்து தேய்பொழுது
- மனம்வருந்தி வாடும் போது; தெறுசீத நீர் இந்து-
வருததுகின்ற குளிர்ந்த தன்மையை உடைய சந்திரன்; எரி கதிரினான் என-
வெய்ய கதிர்களை உடைய சூரியன் போல; வான் உந்துவான் - வானத்தில்
எழுவானாயினான்.

     அந்தியாள் - மாலைக்காலமாகிய பெண்;

     'அந்தியென்னும் பசலை மெய்யாட்டி' என்பது மணிமேகலை. (5-140).
பிரிந்தார்க்குக் குளிர்ந்த பொருள்களுக்கு வெப்பம் தருமாதலின் சந்திரனும்
சூரியன்போல வெப்பமுண்டாகத் தோன்றினான் என்றார்.  'காலை அரும்பிப்
பகலெல்லாம் போதாகி மாலைமலரும் இந்நோய்' (குறள் 1227) என்றபடி
மாலையில் ஆசை மிகுதியால் இராமனுக்குத் தனிமைத்துன்பம் அதிகமாயிற்று.
என - உவம உருபு.                                           38