3748. | மண் துயின்றன; நிலைய மலை துயின்றன; மறு இல் பண் துயின்றன; விரவு பணி துயின்றன; பகரும் விண் துயின்றன; கழுதும் விழி துயின்றன; பழுது இல் கண் துயின்றில, நெடிய கடல் துயின்றன களிறு. |
மண் துயின்றன- பூமியில் வாழும் உயிரினங்கள் தூங்கின; நிலைய மலை துயின்றன- அசையாத நிலையை உடைய மலையில் உள்ள உயிர்கள் உறங்கின; மறுஇல் பண் துயின்றன - குற்றமற்ற நீர் நிலைகள் தூங்கின; விரவு பணி துயின்றன- (நாகலோகத்தில்) பொருந்திய பாம்புகள் உறங்கின; பகரும் விண் துயின்றன - பெருமையாகச் சொல்லப்படும் விண்மிசை உயிர்கள் தூங்கின; கழுதும் விழி துயின்றன- பேய்களும் கண் உறக்கம் கொண்டன; நெடிய கடல் துயின்றன களிறு - பெரிய திருப்பாற்கடலில் உறங்குவனவாகிய இராமலக்குவராகிய யானைகள்; பழுது இல் கண்துயின்றில - குற்ற மற்ற கண்களை மூடவில்லை. மண், மலை, பண், பணி, விண், பேய், ஆகிய அனைத்தும் உறங்க, இராமலக்குவர் உறக்கம் கொள்ளவில்லை. இராமன் பிராட்டியைப் பிரிந்த வருத்தத்தாலும், இலக்குவன் எப்போதும் விழித்திருந்து இராமனைக் காக்கும் இயல்புடையனாதலாலும் இருவரும் உறங்கவில்லை. மண், மலை, விண் என்பவை ஆகுபெயராய் அவற்றிலுள்ள உயிர்களை உணர்த்தின. பண் - நீர்நிலை. (திருக்குற்றாலப்புராணம்: திருநதி - 12). பண்ணை என்பதன் விகாரம். ''நடுராத்திரியில் ஒரு முகூர்த்த காலம் நீர் தூங்கும்'' என்பர். இரவில் அலைந்து திரியும் பேய் சிறிது போது தூங்கும். 'பேயும் துயின்றதால் பேரியாமம்'; ''உயிர்புறம்பே தோன்றும் கழுதும் துயின்றதே'' (நள-262, 114) என்ற அடிகளை ஒப்பு நோக்குக. களிறு உவமை ஆகுபெயராய் இராமலக்குவரை உணர்த்திற்று. 40 |