3754. | அஞ்சனைக்கு ஒரு சிறுவன், அஞ்சனக் கிரி அனைய மஞ்சனைக் குறுகி, ஒரு மாணவப் படிவமொடு, 'வெஞ் சமத் தொழிலர், தவ மெய்யர், கைச் சிலையர்' என, நெஞ்சு அயிர்த்து, அயல் மறைய நின்று, கற்பினின் நினைவும்: |
அஞ்சனைக்கு ஒரு சிறுவன்- அஞ்சனாதேவியின் ஒப்பற்ற மகனான அனுமன்; ஒரு மாணவப் படிவமொடு - ஒரு மாணாக்கன் வடிவம் தாங்கி; அஞ்சனக்கிரி அனைய - நீலமலையைப் போன்ற; மஞ்சனைக்குறுகி - மைந்தனாம் இராமனை நெருங்கி; அயல் மறைய நின்று- அருகில் மறைவாக நின்று; 'வெஞ்சமத் தொழிலர்- (அவர்களை நோக்கி) இவர்கள் கொடிய போர்த்தொழில் உடையர்; தவ மெய்யர் - தவவேடம் தாங்கிய உடம்பினர்; கைச்சிலையர் - கையில் வில்லேந்தியுள்ளனர்'; என நெஞ்சு அயிர்த்து - என்று மனத்தில் ஐயங்கொண்டு; கற்பினின் நினையும் - தனது கல்விஅறிவால் அவர்களைப் பற்றிச் சிந்தித்தான்; அனுமன் உண்மை அறிதற் பொருட்டுத் தன் வடிவத்தை மாற்றிக்கொண்டு மாணாக்க வேடத்தோடு இராமனை அணுகினான். அஞ்சனை - அனுமனின் தாய்; அஞ்சனை மகன் ஆஞ்சனேயன். மஞ்சன் - மைந்தன் என்பதன் போலி. தயரதன் மகன் என்னும் கருத்தால் மஞ்சன் என்றார். மைந்தன் - வலிமையுடையவன் என்றும் கொள்ளலாம். போர்த்தொழில் உடையராயும், வில்லேந்தியவராயும் விளங்கியவர்கள் தவவேடம் கொண்டவராயும் தோன்றியதால் அனுமன் ஐயங்கொண்டான். இவ்வாறே சடாயுவும் இராமலக்குவரைக் கண்டபோது ''வினையறு நோன்பினர் அல்லர்; வில்லினர்; புனை சடை முடியினர்; புலவரோ'' (2700) எனஅயிர்த்தான். 4 |