3754.அஞ்சனைக்கு ஒரு சிறுவன்,
     அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி, ஒரு
     மாணவப் படிவமொடு,
'வெஞ் சமத் தொழிலர், தவ மெய்யர்,
     கைச் சிலையர்' என,
நெஞ்சு அயிர்த்து, அயல் மறைய
     நின்று, கற்பினின் நினைவும்:

     அஞ்சனைக்கு ஒரு சிறுவன்- அஞ்சனாதேவியின் ஒப்பற்ற மகனான
அனுமன்; ஒரு மாணவப் படிவமொடு - ஒரு மாணாக்கன் வடிவம் தாங்கி;
அஞ்சனக்கிரி அனைய -
நீலமலையைப் போன்ற; மஞ்சனைக்குறுகி -
மைந்தனாம் இராமனை நெருங்கி; அயல் மறைய நின்று- அருகில் மறைவாக
நின்று; 'வெஞ்சமத் தொழிலர்- (அவர்களை நோக்கி) இவர்கள் கொடிய
போர்த்தொழில் உடையர்; தவ மெய்யர் - தவவேடம் தாங்கிய உடம்பினர்;
கைச்சிலையர் -
கையில் வில்லேந்தியுள்ளனர்'; என நெஞ்சு அயிர்த்து -
என்று மனத்தில் ஐயங்கொண்டு; கற்பினின் நினையும் - தனது
கல்விஅறிவால் அவர்களைப் பற்றிச் சிந்தித்தான்;

     அனுமன் உண்மை அறிதற் பொருட்டுத் தன் வடிவத்தை
மாற்றிக்கொண்டு மாணாக்க வேடத்தோடு இராமனை அணுகினான். அஞ்சனை
- அனுமனின் தாய்; அஞ்சனை மகன் ஆஞ்சனேயன்.  மஞ்சன் - மைந்தன்
என்பதன் போலி. தயரதன் மகன் என்னும் கருத்தால் மஞ்சன் என்றார்.
மைந்தன் - வலிமையுடையவன் என்றும் கொள்ளலாம்.  போர்த்தொழில்
உடையராயும், வில்லேந்தியவராயும் விளங்கியவர்கள் தவவேடம்
கொண்டவராயும் தோன்றியதால் அனுமன் ஐயங்கொண்டான்.  இவ்வாறே
சடாயுவும் இராமலக்குவரைக் கண்டபோது ''வினையறு நோன்பினர் அல்லர்;
வில்லினர்; புனை சடை முடியினர்; புலவரோ'' (2700) எனஅயிர்த்தான்.    4