3757. | 'தருமமும் தகவும், இவர்; தனம் எனும் தகையர், இவர்; கருமமும் பிறிது ஓர் பொருள் கருதி அன்று; அது கருதின், அரு மருந்து அனையது, இடை அழிவு வந்துளது; அதனை, இருமருங்கினும், நெடிது துருவுகின்றனர், இவர்கள். |
தருமமும் தகவும் இவர் - தருமமும் நல்லொழுக்கமுமாகவே இவர்கள் கொள்ளத்தக்கவர்; தனம் எனும் தகையர் - தமக்குரிய செல்வமாக தருமத்தையும் தகவையும் எண்ணும் தன்மையுடையவர்கள்; இவர் கருமமும் - இவர்களது செயலும்; பிறிது ஓர் பொருள் - வெறோருபொருளை; கருதி அன்று - கருதியது அன்று; அது கருதின் - அது குறித்து ஆராய்ந்து பார்த்தால்; அருமருந்து அனையது - பெறுதற்கரிய அமிழ்தம் போன்ற பொருளிற்கு; இடை அழிவு வந்துளது - இடையிலே அழிவு வந்திருக்கின்றது; அதனை - அந்த அரிய பொருளையே; இவர்கள் - .; இருமருங்கிலும் - இரண்டு பக்கங்களிலும்; நெடிது துருவுகின்றனர் - நெடிதாகப் பார்வையைச் செலுத்தித் தேடுகிறார்கள். அனுமன் சூரியனிடம் எல்லாக்கலைகளையும் கற்றவனாதலின் இராமலக்குவரின் முகக்குறிப்புகளால் அவர்களின் நிலையை ஊகித்து அறிந்தனன். தருமமும் தகவும் செல்வமாகும் என்பதை 'அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை' (குறள் - 32) என வள்ளுவரும் குறித்தார். அருமருந்து - கிடைத்தற்கரிய தேவ அமுதம்; சீதை அம்மருந்து போன்றவள். 'மருந்து அனையதேவி' (5350) என்றது காண்க. 7 |