3758. | 'கதம் எனும் பொருண்மை இலர்; கருணையின் கடல் அனையர்; இதம் எனும் பொருள் அலது, ஓர் இயல்பு உணர்ந்திலர் இவர்கள்; சதமன் அஞ்சுறு நிலையர்; தருமன் அஞ்சுறு சரிதர்; மதனன் அஞ்சுறு வடிவர்; மறலி அஞ்சுறு விறலர்.' |
இவர்கள்- -; கதம் எனும்- கோபம் என்னும்; பொருண்மை இலர்- பொருளின் தன்மையில்லாதவர்கள்; கருணையின் - கருணையால்; கடல் அனையர் - கடலை ஒத்தவர்கள்; இதம் எனும் பொருள் அலது - நன்மை என்கின்ற பொருளை அல்லாமல்; ஓர் இயல்பு உணர்ந்திலர் - வெறோரு பொருளை (தீமையை) அறிந்தவர்கள் அல்லர்; சதமன்- இந்திரனும்; அஞ்சுறு நிலையர் - அஞ்சத்தக்க தோற்றம் உள்ளவர்கள்; தருமன் - தரும தேவதையும்; அஞ்சுறு சரிதர் - அஞ்சத்தக்க ஒழுக்கம் உடையவர்கள்; மதனன் - மன்மதனும்; அஞ்சுறு வடிவர் - அஞ்சத்தக்க வடிவழகு பொருந்தியவர்கள்; மறலி - யமனும்; அஞ்சுறுவிறலர்- அஞ்சத்தக்க ஆற்றல் நிறைந்தவர்கள். கோபம் இல்லாமை மட்டுமன்றி, அதற்குரிய தன்மையும் இவர்கள்மாட்டு இல்லாமையால் ''கதமெனும் பொருண்மையிலர்'' என்றான். தோற்றப்பொலிவில் இந்திரனைவிட, நல்லொழுக்கத்தில் அறக்கடவுளைவிட, வடிவழகில் மன்மதனைவிட, ஆற்றலில் யமனைவிட இராமலக்குவர் மேம்பாட்டு விளங்கினர் என அனுமன் உணர்ந்தான். கருணை மிகுதியை உணர்த்தவே 'கருணையின் கடல் அனையர்' என நினைந்தான். சதமகன் என்பது சதமன் என மருவியது; நூறு யாகங்களைச் செய்தவன் ஆதலின் இந்திரன் சதமகன் எனப்பட்டான். (சதம் - நூறு; மகம் - யாகம்) மதனன் - களிப்பை உண்டாக்குபவன்; மறல் - கொடுமை, அதை உடையவன் மறலி. 8 |