3761.'மயில் முதல் பறவை எல்லாம்,
     மணி நிறத்து இவர்கள் மேனி
வெயில் உறற்கு இரங்கி, மீதா,
     விரி சிறைப் பந்தர் வீசி,
எயில் வகுத்து எய்துகின்ற; இன
     முகில் கணங்கள், எங்கும்
பயில்வுற, திவலை சிந்தி,
     பயப்பயத் தழுவும், பாங்கர்.

     மயில் முதல் பறவை எல்லாம்- மயில் முதலான பறவைகள் எல்லாம்;
மணி நிறுத்து இவர்கள் மேனி -
மணிபோன்ற நிறத்தினை யுடைய இவர்கள்
மேனியில்; வெயில் உறற்கு இரங்கி - வெயில் படுவதற்கு மனம் வருந்தி;
மீதா, விரிசிறைப் பந்தர் வீசி -
இவர்கள் மீது விரிந்த சிறகுகளைப்
பந்தலாகப் பரப்பி, எயில் வகுத்து - மதில் போலச் சுற்றிலும்
வளைத்துக்கொண்டு; எய்துகின்ற - தொடர்ந்து வருகின்றன;  இனமுகில்
கணங்கள்-
இனமாகிய மேகக் கூட்டங்கள்; எங்கும் பயில்வுற -
எல்லா இடங்களிலும் நெருக்கமாக; திவலை சிந்தி - நீர்த்துளிகளைச்
சிந்திக்கொண்டு; பாங்கர் - இவர்கள் பக்கத்தில்; பயப்பயத்தழுவும்- மெல்ல
மெல்லத் தொடர்ந்து வருகின்றன;

     மயில் முதலிய பறவைகள் நிழல் செய்ய, மேகங்கள் நீர்த்துளிகளைச்
சிந்தி வெப்பம் தாக்காது இருவரையும் காக்க முயன்றன.  இராமன் நிறத்திற்கு
நீலமணியும், இலக்குவன் நிறத்திற்கு மாணிக்க மணியும் உவமையாகக்
கொள்ளலாம்.  உயர்ந்தோர்க்குப் பறவைகள் இங்ஙனம், சிறை விரித்து நிழல்
செய்யும் என்பதை ''ஆஅயெயினன் --- மயங்கமர் வீழ்ந்தென--- ஒண்கதிர்
தெறாமைச் சிறகரில் கோலி நிழல் செய்து' (அகம். 208-5-12) என்பதால்
அறியலாம். முகிற்கூட்டங்கள் நீர்த்துளிகளைச் சிந்திச் செல்வதைப் 'பனிபுரை
துளிமேகம் புயல்தர. . .  வழியினியன போனார்' (2000) என்பதில் காண்க.
பந்தர், பாங்கர் - போலிகள். பையப் பைய என்பன பயப்பய எனப்
போலியாய் அடுக்கின.                                        11