அனுமன் விடை

3765.'மஞ்சு எனத் திரண்ட கோல
     மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி, நளிர்
     இரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய
     கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும்
     அனுமன் என்பேன்;

     மஞ்சு எனத்திரண்ட- மேகம் போல நீலநிறமுடையதாய்த் திரண்டு
அமைந்த; கோல மேனிய - அழகிய மேனியை உடையவனே!; மகளிர்க்கு
எல்லாம் -
பெண்கள் யாவர்க்கும்; நஞ்சு எனத்தகைய ஆகி- நஞ்சு என்று
சொல்லத்தக்க தன்மையை உடையனவாகி; நளிர் இரும் பனிக்கு - குளிர்ச்சி
மிக்க பனிக்கு; தேம்பாக் கஞ்சம் ஒத்து - வாடாத தாமரை மலர்களுக்கு
ஒப்பாக; அலர்ந்த - மலர்ந்து விளங்குகின்ற; செய்ய கண்ண - சிவந்த
கண்களை உடையவனே!; யான் - யான்; காற்றில் வேந்தற்கு -
வாயுதேவனுக்கு; அஞ்சனை வயிற்றில் - அஞ்சனாதேவியின் வயிற்றில்;
வந்தேன் -
பிறந்தேன்; நாமமும் - என் பெயரும்; அனுமன் என்பேன் -
அனுமன் என்று அழைக்கப்பெறுவேன்.

     நீலமேகம் நிறத்தாலும், குளிர்ச்சியாலும், அழகாலும் இராமன் மேனிக்கு
உவமையாயிற்று.  தன்னைக் காணும் மகளிர்க்கு இன்பம் அளிக்காமல்
காமநோயை உண்டாக்கி வருத்துவதால் 'நஞ்சு எனத் தகைய ஆகி'
எனப்பட்டது.  ''ஏழையர் ஆவியுண்ணும் இணைக்கூற்றம் கொல்லோ
அறியேன்.  அழியங் கண்ணபிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்''
(திருவாய்மொழி 7.7) என்பது ஒப்புநோக்கத்தக்கது.  பனிக்குத் தேம்பாக்
கஞ்சம் இராமன் கண்களுக்கு இல்பொருள் உவமை.  இராமனின் அழகிய
மேனியிலும், சிவந்த கண்களிலும் அனுமன் ஈடுபாடு கொண்டதைக்
'கோலமேனிய,' செய்யகண்ண' என்னும் தொடர்கள்உணர்த்தும்.         15