3774. | ''எம்மையே காத்திர்'' என்றல் எளிது அரோ? இமைப்பு இலாதோர் - தம்மையே முதல் இட்டு, ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல் மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர்; முருகற் செவ்வி உம்மையே புகல் புக்கேமுக்கு, இதின் வரும் உறுதி உண்டோ? |
இமைப்பு இலாதோர் தம்மையே முதல் இட்டு- கண்கள் இமைத்தல் இல்லாத தேவர்களை முதலாகக் கொண்டு; ஆன்ற சராசரம் - உயர்ந்த அசையும் பொருள்களையும் அசையாப்பொருள்களையும்; சமைந்த ஆற்றல் - படைத்த ஆற்றலை உடைய; மும்மை ஏழ் உலகும் காக்கும் - மூன்று வகைப்பட்ட ஏழு உலகங்களையும் பாதுகாக்கும்; முதல்வர் நீர் - தலைவர் நீங்கள் (ஆதலால்); எம்மையே காத்திர் - எளியராகிய எங்களைமாத்திரமே காப்பாற்றுவீர்; என்றல் - என்று கூறுதல்; எளிது - (உங்களுக்கு) எளிமைத் தன்மையைக் கற்பிப்பது ஆகும்; முருகற் செவ்வி- முருகனைப் போன்ற சிறப்பினை உடைய; உம்மையே புகல்புக்கேமுக்கு- உங்களையே புகலிடமாகக் கொண்டு அடைக்கலம் அடைந்த எங்களுக்கு; இதின் வரும் உறுதி உண்டோ - இதைக் காட்டிலும் வந்தடையக்கூடிய நன்மை வேறு உளதோ? (இல்லை), இராமலக்குவரின் சிறப்பை அறிந்து, அவர்தம் ஆற்றலைப்புகழ்ந்து பேசித் தமக்கு அடைக்கலம் கொடுத்துக் காக்குமாறு அனுமன் வேண்டினான். முருகன் - முருகை உடையவன்; அழகும் இளமையும் தெய்வத் தன்மையும் உடையவன். எம்மையே தம்மையே - ஏகாரங்கள் பிரிநிலை; அரோ - அசைநிலை. 24 |