இராமன் திருவடிகளை அனுமன் வணங்குதல் 3779. | என்று,அவன் தோற்றம் ஆதி இராவணன் இழைத்த மாயப் புன்தொழில் இறுதி ஆக, புகுந்த உள பொருள்கள் எல்லாம், ஒன்றும் ஆண்டு ஒழிவுறாமல், உணர்த்தினன்; உணர்த்தக் கேட்டு நின்ற அக்காலின் மைந்தன், நெடிது உவந்து, அடியில் தாழ்ந்தான். |
என்று - என்று இவ்வாறு; அவன் தோற்றம் ஆதி - இராமபிரானின் பிறப்பு முதல்; இராவணன் இழைத்த- இராவணன் செய்த; மாயப் புன்தொழில் இறுதி ஆக - வஞ்சனையாகிய கீழ்த்தரமான செயல் ஈறாக; புகுந்து உள பொருள்கள் எல்லாம் - நடந்துள்ள செய்திகளையெல்லாம்; ஒன்றும் ஆண்டு ஒழிவு உறாமல் - எந்த ஒரு நிகழ்ச்சியும் விடுபட்டுப் போகாமல்; உணர்த்தினன் - எடுத்துரைத்தான்; உணர்த்த - அவ்வாறு சொல்ல; கேட்டு நின்ற- கேட்டுக் கொண்டு நின்ற; அக்காலின் மைந்தன்- காற்றின் மைந்தனாகிய அந்த அனுமான்; நெடிது உவந்து- பெரிதும்மகிழ்ந்து; அடியில் தாழ்ந்தான் - இராமபிரான் திருவடிகளில் விழுந்து வணங்கினான். இராவணன் இழைத்த மாயப் புன்தொழில் - வஞ்சனையால் சீதையைக் கவர்ந்த செயல். சீதையைக் கவர்ந்த செயலைக் கூறவும் விரும்பாததால் கம்பர் 'மாயப்புன் தொழில்' எனக் குறித்தார். இலக்குவன் கூறிய வரலாற்றால் இராமன் வணங்கத்தக்க குணங்களை உடையவன் என அனுமன் அறிந்ததால் நெடிது மகிழ்ந்து அவனது திருவடிகளில்வணங்கினான். 29 |