'மறைவனாகிய அனுமன் வணங்குவது முறையோ'?
என்ற இராமனுக்கு அனுமன் மறுமொழி

3780.தாழ்தலும்,'தகாத செய்தது
     என்னை, நீ? தருமம் அன்றால்;
கேள்வி நூல் மறைவலாள!'
     என்றனன்; என்னக் கேட்ட
பாழி அம் தடந் தோள் வென்றி
     மாருதி, 'பதுமச் செங்கண்
ஆழியாய்! அடியனேனும்
     அரிக் குலத்து ஒருவன்' என்றான்.

     தாழ்தலும் - (அனுமன் தன்னை) வணங்கிய அளவில்; கேள்வி நூல்
மறை வலாள -
(இராமன் அனுமனை நோக்கி) கேட்டறிந்த சாத்திரங்களிலும்
வேதங்களிலும் வல்ல அந்தணனே! நீ - - ; தகாத செய்தது என்னை?-
செய்யத்தகாத காரியத்தைச் செய்தது ஏன்? தருமம் அன்று - (அந்தணன்
அரசனை வணங்குதல்) தருமம் அன்று; என்றனன் - என்று கூறினனாக;
என்னக் கேட்ட -
அவ்வாறு கூறியதைக் கேட்ட; பாழி அம் தடந்தோள்-
வலிமையான அழகிய பெரிய தோள்களை உடைய; வென்றி மாருதி -
வெற்றிமிக்க அனுமன்; பதுமச் செங்கண் ஆழியாய் - 'செந்தாமரை
மலர்போன்ற சிவந்த கண்களையும் ஆணைச் சக்கரமும் உடையவனே!
அடியனேனும் -
அடியனாகிய யானும்;  அரிக்குலத்து ஒருவன் -
குரங்குக் குலத்தில் தோன்றிய ஒருவனே யாவேன்;  என்றான் - என்று
கூறினான்.

     நால்வகை வருணத்தோருள் அந்தணர் உயர்ந்தோராகக் கருதப்பட்டதால்
அந்தணனாகிய அனுமன் அரசனாகிய தன்னை வணங்குதல் தகாது; தருமம்
ஆகாது என்றனன் இராமன். அனுமன் அந்தணன் வேடத்தில் இருந்தமையால்
இராமன் இங்ஙனம் கூறினான்.

     கேள்வி நூல் - வேதம்; சுருதி. செவி வழியாக மட்டும் கேட்கப்படுதலின்
வேதத்தைக் கேள்வி நூல் என்பது  பழ மரபு.  கேட்டற்கரிய நூற்பொருளைக்
கற்றறிந்தார் வழிக்கேட்டலும் ஆம். 'கற்றிலனாயினும் கேட்க' என்றார்
வள்ளுவரும். (குறள். 414). மறை - வேதம். மருத்துவின் மகனாதலின் 'மாருதி'
என்பது அனுமன் பெயராயிற்று. ஆழியாய் - ஆணைச் சக்கரம் உடையவனே
என்பது பொருள். தயரத சக்கரவர்த்தியின் மகனாதலின் காடாளும் இராமனை
இங்ஙனம் அனுமன் விளித்தான்.  அடியேன் தானும் - உம்மை இறந்தது
தழீஇய எச்ச உம்மை. சுக்கிரீவனே அன்றி யானும் எனப் பொருள்படும். ஆல்
- அசை.                                                      30