அனுமனைப் பற்றி இலக்குவனிடம் இராமன் வியந்து பேசுதல் 3783. | தாள்படாக்கமலம் அன்ன தடங் கணான், தம்பிக்கு, 'அம்மா! கீழ்ப் படாநின்ற நீக்கி, கிளர் படாது ஆகி, என்றும் நாட்படா மறைகளாலும், நவை படா ஞானத்தாலும், கோட்படாப் பதமே, ஐய! குரக்கு உருக்கொண்டது' என்றான். |
தாள்படாக்கமலம் அன்ன - தண்டில் பொருந்தாத தாமரை மலர் போன்ற; தடங்கணான் - பெரிய கண்களை உடைய இராமன்; தம்பிக்கு - தம்பியாகிய இலக்குவனிடம்; ஐய - ஐயனே!கீழ்ப்படா நின்ற நீக்கி - கீழ்மைப்பட்டு நின்ற இராஜச, தாமச குணங்கள் நீங்கப் பெற்று; கிளர்படாது ஆகி - ஞான ஒளி கெடாதது ஆகி; என்றும் - எப்பொழுதும்; நாட்படா மறைகளால் - காலவரையறைக்கு உட்படாத வேதங்களாலும்; நவைபடா ஞானத்தாலும் - குற்றம் பொருந்தாத தத்துவ ஞானத்தாலும்; கோட்படாப் பதமே - அறியப்படாத பரம்பொருள் தத்துவமே; குரக்கு உருக் கொண்டு- குரங்கின் வடிவத்தைக் கொண்டது; என்றான் - என்று உரைத்தான். மலரைத் தாங்கும் நாளம் போல இராமன் கண்களைத் தாங்குவன இல்லையாதலால் 'தாள் படா கமலம் அன்ன' என்றார். இஃது இல்பொருள் உவமை, ஐய - என்றது அன்பு பற்றிய விளி. நாட்படா மறைகள் என்றதற்கு - அழியாது நிலைத்து நிற்கும் வேதங்கள் என்பது கருத்து. வேதங்களுக்கும் ஞானத்திற்கும் அப்பாற்பட்டு நிற்பது பரம்பொருள் தத்துவம் ஆதலின் 'மறைகளாலும் நவைபடா ஞானத்தாலும் கோட்படாப் பதம்' என்றார். இதனால் பரம்பொருள் தத்துவமே குரங்கின் வடிவத்தைக் கொண்டது என அனுமனின் சிறப்புப் புலப்படுத்தியதாகிறது. பரமனாகிய இராமனே அனுமனைப் பரம்பொருள் எனக் குறிப்பது ஆழ்ந்த கருத்துடையது. எல்லை கடந்த ஒன்று (Infinitive) தன் கூறாகிய அனுமனை இளங்காட்டுகிறது. 'எல்லையொன்றின்மை எனும்' பொருளதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயன்ற முயற்சியைக் கருதியும், தமிழச்சாதி அமரத்துவம் வாய்ந்தது என்றிருந்தேன் என்ற மகாகவி பாரதியார் கூற்றினை ஒப்பிட்டு ஆழம உணர்க. அம்மா - வியப்பிடைச்சொல். குரங்கு + உரு - குரக்குஉரு. 33 |