3791. | 'வேல் இகல் சினவு தாடகை விளித்து உருள, வில் கோலி, அக் கொடுமையாள் புதல்வனைக் கொன்று, தன் கால்இயல் பொடியினால், நெடிய கற் படிவம் ஆம் ஆலிகைக்கு, அரிய பேர் உரு அளித்தருளினான். |
வேல் இகல் சினவு தாடகை - (அவ்விருவருள் முன்னவனாம் இராமன்) சூலாயுதத்தை ஏந்தி மாறுபட்டவளாய்ச் சினந்து வருகின்ற தாடகை; விளிந்து உருள - இறந்து தரையில் உருளுமாறு; வில் கோலி - வில்லை வளைத்து; அக்கொடுமையாள்- அக்கொடியவளின்; புதல்வனைக் கொன்று- மகனான சுபாகுவைக் கொன்று; தன்கால் இயல் பொடியினால்- தன் கால்களில் பொருந்திய தூளியினால்; நெடிய கல் படிவம் ஆம்- நீண்ட கல் வடிவமாகக்கிடந்த; ஆலிகைக்கு - அகலிகைக்கு; அரிய பேர் உரு - பெறுதற்கரிய சிறந்த உருவத்தை; அளித்து அருளினான்- கொடுத்து அருள் செய்தான். 'நல்லுறுப்பு அமையும் நம்பியரில் முன்னவர்' என அடுத்த பாடலில் வருவது இடைநிலை விளக்காய் இப்பாடலுக்கு எழுவாயாய் நின்றது. 6 |