3809.'மைஅறு தவத்தின் வந்த சவரி,
     இம் மலையில் நீ வந்து
எய்தினை இருந்த தன்மை,
     இயம்பினள்; யாங்கள் உற்ற
கை அறு துயரம், நின்னால்
     கடப்பது கருதி வந்தேம்;
ஐய! நின் தீரும்' என்ன, அரிக்குலத்து
     அரசன் சொல்வான்;

     ஐய - (இராமன் சுக்கிரீவனை நோக்கி) ஐயனே! மை அறு தவத்
தின்வந்த -
குற்றமற்ற தவமுடையவளாய் வந்த; சவரி - சவரியானவள்;
இம்மலையில் நீ வந்து
- இந்த ருசியமுக மலையில் நீ வந்து; எய்தினை
இருந்த தன்மை
- பொருந்தி இருந்த நிலையை; இயம்பினள் - சொன்னாள்;
யாங்கள் உற்ற -
நாங்கள் அடைந்துள்ள; கையறு துயரம் - செயலற்று
வருந்தும் பெருந்துன்பத்தை; நின்னால் கடப்பது கருதி - உன்னால்
நீக்குவதுகருதி; வந்தேம் - இங்கு வந்தோம்; நின் தீரும் - அத்துன்பம்
உன்னாலேயேதீர்வதாகும்'; என்ன - என்று கூற (அதைக்கேட்ட);
அரிக்குலத்து அரசன் - குரங்கினத்திற்கு அரசனாகிய சுக்கிரீவன்;
சொல்வான் - சொல்லத்தொடங்கினான்.

     சுக்கிரீவன் இருந்த மலையை அறிந்தது எவ்வாறு என்பதை அறிவிக்கச்
'சவரி . . . . இயம்பினள்' என்றான் இராமன்.  தான் வந்த காரணத்தையும்
'கையறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தேம்' என உரைத்தான். மை -
குற்றம்; தவத்திற்குக் குற்றம் - காமம், வெகுளி, மயக்கம் இடை இடையே
நிகழ்வது. 'வந்து எய்தினை இருந்த தன்மை' என்பதால் ருசியமுகமலை
சுக்கிரீவனுக்கு உரிய மலையன்று என்பதும், வாலிக்கு அஞ்சியே அங்கே
தங்கியிருந்தால் என்பதும் பெறப்படுகின்றன.                        24