3813.ஆர்த்ததுகுரக்குச் சேனை;
     அஞ்சனை சிறுவன் மேனி,
போர்த்தன, பொடித்து உரோமப்
     புளகங்கள்; பூவின் மாரி
தூர்த்தனர், விண்ணோர், மேகம்
     சொரிந்தென, அனகன் சொன்ன
வார்த்தை, எக் குலத்துளோர்க்கும், மறையினும்
     மெய் என்று உன்னா.

     அனகன் சொன்ன வார்த்தை- குற்றமற்றவனாகிய இராமன் சொன்ன
சொல்; எக்குலத்துளோர்க்கும் - எல்லாக் குலத்தில் தோன்றியவர்க்கும்;
மறையினும் -
வேதவாக்கைக் காட்டிலும்; மெய் என்று உன்னா -
உண்மையானதாகும் என்று எண்ணி; குரக்குச் சேனை ஆர்த்தது- குரங்குக்
கூட்டம் ஆரவாரம் செய்தது; அஞ்சனை சிறுவன் - அஞ்சனையின்
புதல்வனான அனுமன்; மேனி - மேனியை; உரோமப் புளகங்கள்-
மயிர்ச்சிலிப்புகள்; பொடித்துப் போர்த்தன - அரும்பி மறைத்து விட்டன;
விண்ணோர் -
தேவர்கள்; பூவின்மாரி தூர்த்தனர் - மலர் மழையால்
பூமியை நிரப்பினர்; மேகம் சொரிந்தன- மேகங்கள் மழையைப் பொழிந்தன.

     இராமன் கூறிய உரைகளால் வாலிவதம் உறுதி என்ற மகிழ்ச்சியாலும்,
யாரினும் சிறந்த இராமன் நட்புக்கிடைத்த களிப்பாலும் குரங்குச் சேனை
மகிழ்ந்தது எனலுமாம்.  தான் இராமனிடத்துத் தூதுபோய் வந்தது
பயன்பெற்றதனால் அனுமன் மேனி பொடித்தனன்.  இராவண வதம்
நடைபெறும்; தங்கள் துன்பம் நீங்க வழி ஏற்பட்டது என்ற மகிழ்ச்சியால்
வானவர் பூமாரி பொழிந்தனர்.  இந்த நட்பால் நல்ல பயன் என்பதற்கு
நன்னிமித்தமாக மேகம் மழை பொழிந்தது எனலாம்.                   28