3816.ஆரமும்அகிலும் துன்றி, அவிர்
     பளிக்கு அறை அளாவி,
நாரம் நின்றன போல் தோன்றி,
     நவ மணித் தடங்கள்நீடும்
பாரமும், மருங்கும், தெய்வத் தருவு,
     நீர்ப்பண்ணை ஆடும்
சூர் அரமகளிர் ஊசல்
     துவன்றிய கம்மைத்து அன்றே.

     ஆரமும் அகிலும் துன்றி - (அச்சோலை) சந்தன மரங்களும் அகில்
மரங்களும் நெருங்கப் பெற்று; அவிர் பளிக்கு அறை அளாவி - விளக்கம்
மிக்க படிகப் பாறைகள் பொருத்தப்பெற்று; நாரம் நின்றன போல் - அவை
தண்ணீர் நிறைந்து நின்றவை போல; தோன்றி - காணப்பட்டு (விளங்க);
நவமணித் தடங்கள் -
நவமணிகளால் அமைந்த பள்ளமான இடங்களின்;
நீடும் பாரமும் -
நீண்டகரைகளிலும்; மருங்கும் - பக்கங்களிலுமுள்ள;
தெய்வத்தருவு -
தெய்வத் தன்மையுடைய மரங்களில்; நீர்ப்பண்ணை
ஆடும்-
நீர் விளையாட்டைச் செய்யும்; சூர் அர மகளிர் - தெய்வ
மகளிர்தம்; ஊசல் துவன்றி - ஊஞ்சல்கள் நெருங்கிய; சும்மைத்து -
ஆரவாரத்தைஉடையது.

     சந்தனம் முதலிய சிறந்த மரங்களும், பளிக்கறைகளும் பொருந்தி,
தேவமகளிர் இங்குள்ள நீர்நிலைகளில் நீராடி, மரங்களில் ஊஞ்சல்
விளையாடப் பெற்ற சிறப்பினை உடையது அச்சோலை எனப்பட்டது.
பளிக்கு - பளிங்கு; அறை - பாறை; நாரம் - தண்ணீர்.  இது
வடசொல்; பாரம் - கரை; பண்ணை - மகளிர் விளையாட்டு; தரு -
தருவு என உகரச்சாரியை பெற்று வந்தது, சும்மைத்து - ஒன்றன்பால்
குறிப்புவினைமுற்று.  தேவ மகளிர் ஊசலாடும் இயல்பினர் என்பதை
'வானவர் மகளிராடும் வாசம் நாறூசல் கண்டார்' (862) என்பதாலும்
அறியலாம்.                                              31