இராமன் சுக்கிரீவனோடு விருந்துண்ணுதல்

3818.ஏய அன்னது ஆம் இனிய சோலைவாய்,
மேய மைந்தரும், கவியின் வேந்தனும்,
தூய பூ அணைப் பொலிந்து தோன்றினார்,
ஆய அன்பினோடு அளவளாவுவார்.

     ஏய அன்னது ஆம் - இத்தகைய சிறப்புக்கள் பொருந்திய; இனிய
சோலைவாய் -
இனிமைமிக்க சோலையிடத்து; மேய மைந்தரும் -
சென்றடைந்த இராமலக்குவரும்; கவியின் வேந்தனும் - வானரத்
தலைவனாகிய சுக்கிரீவனும; தூய பூ அணை - தூய்மையான மல ரணைமீது;
பொலிந்து தோன்றினார்-
சிறக்க வீற்றிருந்தவர்களாய்; ஆய
அன்பினோடு-
பொருந்தியுள்ள அன்போடு; அளவளாவுவார் -
பேசலாயினர்.

     சோலையிலுள்ள மலர்களால் ஆன பூ அனை பிறவற்றினும் பொலிவு
மிக்கதாக விளங்கியதால் 'பூ அணைப் பொலிந்து தோன்றினார்' என்றார்.

     அளவளாவுதல்- நெஞ்சம் கலந்து பேசுதல், சோலைவாய் - வாய் ஏழன்
உருபு. இராமலக்குவரும் சுக்கிரீவனும் மலரணையில் ஒருங்கமர்ந்து அன்பொடு
உரையாடியமை இப்பாடலில் புலப்படுகிறது.                          33