3819.கனியும்,கந்தமும், காயும் தூயன
இனிய யாவையும் கொணர, யாரினும்
புனிதன் மஞ்சனத் தொழில் புரிந்து, பின்
இனிது இருந்து, நல் விருந்தும் ஆயினான்.

     கனியும் - பழங்களும்; கந்தமும் - கிழங்குகளும்; காயும்- காய்களும்;
தூயன இனிய யாவையும் -
தூய்மையாயும் இனிமையாயும் உள்ள
யாவற்றையும்; கொணர - (வானரர்கள்) கொண்டுவர; யாரினும் புனிதன் -
யாவரினும் தூய்மையானவன் ஆகிய இராமன்; மஞ்சனத் தொழில் புரிந்து-
நீராடுதலைச் செய்து; பின் இனிது இருந்து - பின்னர் இனிமையாக இருந்து;
நல் விருந்தும் ஆயினான் -
சுக்கிரீவற்கு நல்ல விருந்தாளியும் ஆனான்.
(விருந்துண்டான்).

     சுக்கிரீவன் தன் பரிவாரங்களைக் கொண்டு விருந்து அளிக்க, இராமன்
நீராடி விருந்துண்டான்.  கந்தம் - கிழங்கு - வடசொல். விருந்து- புதுமை -
விருந்தினர்களைக் குறித்ததால் உவம ஆகுபெயர்.  விருந்தும் - உம்மை
இறந்தது தழுவிய எச்ச உம்மை - நண்பன் ஆனதை உடன் தழுவியது.   34