3825.'கிட்டுவார்பொரக் கிடைக்கின், அன்னவர்
பட்ட நல் வலம் பாகம் எய்துவான்;
எட்டு மாதிரத்து இறுதி, நாளும் உற்று,
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்;

     கிட்டுவார் பொரக் கிடைக்கின் - போர்கருதி தன் எதிரே வருபவர்
கிடைக்கப்பெற்றால்; அன்னவர் பட்ட நல்வலம்- அவர்களிடம் உள்ள நல்ல
வலிமையில்; பாகம் எய்துவான் - பாதியைத் தான் அடைவான்; எட்டு
மாதிரத்து இறுதி -
எட்டுத் திக்கு எல்லையிலும்; நாளும் உற்று -
நாள்தோறும் சென்று; அட்ட மூர்த்தி - அட்டமூர்த்தியாய் விளங்கும்
சிவபிரானின்; தாள்பணியும் - திருவடிகளை வணங்குகிற; ஆற்றலான் -
ஆற்றலையுடைவன்.

     வாலி, தன்னொடு போர்செய்வார் வலிமையில் பாதி தனக்கு வருமாறு
சிவன்பால் வரம்பெற்றிருந்தான்.  இதனை 'இரங்கியான் நிற்ப என் வலி அவன்
வயின் எய்த வரம் கொள் வாலிபால் தோற்றனென்' (6177) என்ற இராவணன்
கூற்றாலும் அறியலாம்.  அட்டமூர்த்திகள் - பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன்,
இயமானன் என்பன.  இவ்வெட்டையும் திருமேனியாய்க் கொண்டவனாதலின்;
சிவபிரான் 'அட்ட மூர்த்தி' எனப்பட்டான்.  நாளும் எட்டுத் திசைகளுக்குச்
சென்று சிவன்தான் பணிந்து வரும் ஆற்றலை உடையவனாதலின் 'ஆற்றலான்'
என்றார்.  வாலிக்குள்ள வரபலமும், தெய்வபக்தியும் இப்பாடலால்
உணர்த்தப்படுகின்றன.                                           40