3830.'கடல் உளைப்பதும், கால் சலிப்பதும்,
மிடல் அருக்கர் தேர் மீது செல்வதும்
தொடர மற்றவன் சுளியும் என்று அலால், -
அடலின் வெற்றியாய்! - அயலின் ஆவவோ?

     அடலின் வெற்றியாய் - வலிமையால் பெற்ற வெற்றி உடையவனே!
தொடர - இடைவிடாமல்; கடல் உளைப்பதும் - கரை கடவாமல் கடல்
ஒலித்துக் கொண்டிருப்பதும்; கால் சலிப்பதும் - காற்றுவீசிக்
கொண்டிருப்பதும்; மிடல் அருக்கர் - வலிமைமிக்க சூரியர்கள்; தேர்மீது
செல்வதும்
- தேர் மீதேறிச் செல்வதும்; அவன் - அவ்வொலி; சுளியும்
என்று அலால் -
சினம் கொள்வான் என்ற அச்சத்தினால் நிகழ்வதன்றி;
அயலின் ஆவவோ -
பிறிதொரு காரணத்தால் நிகழ்வனவோ? (அல்ல).

     இது வாலியின் கோபத்தை உணர்த்தியது.  கடல் முதலியனவெல்லாம்
அவன் கோபத்திற்கு அஞ்சியே நடக்கின்றன என்பதாம்.  உளைப்பது -
மேன்மேலும் பொங்கி எழாமல் ஒரு நிலையில் அடங்கிநிற்றல்; சலிப்பது -
எப்போதும் இயங்கி்க் கொண்டிருப்பது; தேர்மீது செல்வது - தோன்றியும்
மறைந்தும் அந்தந்தக் காலத்திற்கேற்ப நடந்து கொள்ளல்.  வாலி சினத்திற்கு
அஞ்சியே இயற்கையில் செயல்கள் நடைபெறுவதாகக் கூறியதால்
ஏதுத்தற்குறிப்பேற்ற அணி.  மாதந்தோறும் வெவ்வேறாகச் சூரியர் பன்னிருவர்
தோன்றுவர் என்பதால் 'அருக்கர்' எனப் பன்மையால் கூறினான்.  தொடர -
இச்சொல் இறுதிநிலை விளக்கணியாய் ஒலிப்பதும், சலிப்பதும், செல்வதும்
என்பவற்றோடு இயையும்.  இறைவனுக்குக் கட்டுப்படும் இயற்கை, வாலிக்கும்
கட்டுப்பட்டு இயங்கும் என்பதால் வாலி இறைவன் போன்ற வரம்பில்
ஆற்றலுடையவன் என்பது விளங்கும்.

     அல்லால் - அலால் எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது.         45