3831.'வெள்ளம் ஏழு
     பத்து உள்ள, மேருவைத்
தள்ளல் ஆன தோள்
     அரியின் தானையான்;
உள்ளம் ஒன்றி எவ்
     உயிரும் வாழுமால், -
வள்ளலே! - அவன்
     வலியின் வன்மையால்.

     ஏழுபத்து வெள்ளம் உள்ள - (அவ்வாலி) எழுபது வெள்ளம்
என்கின்ற அளவு உள்ளதும்; மேருவைத் தள்ளல் ஆன - மேருமலையைத்
தள்ளக்கூடியதுமான; தோள் அரியின் தானையான் - தோள் வலிமை
உள்ளதுமான வானரப்படையை உடையவன்; வள்ளலே - வள்ளல்தன்மை
உடையவனே! அவன் - அவ்வாலி; வலியின் வன்மையால் - வலிமையின்
மிகுதியால்; உள்ளம் ஒன்றி - மனம் ஒன்று பட்டு; எவ்வுயிரும் வாழும் -
எல்லா உயிர்களும் வாழ்கின்றன;

     வாலியின் சேனைச் சிறப்பும் ஆட்சிச் சிறப்பும் இங்குக் கூறப்பட்டுள்ளன.
வள்ளல் என்பது இங்கு இராமனைக் குறிக்கும்.  வெள்ளம் என்றது பேரெண்.
யானை ஒன்றும், தேரொன்றும், குதிரை மூன்றும் காலாள் ஐந்தும் கொண்டது-
பக்தி; பக்தி மூன்று கொண்டது சேனாமுகம்; சேனாமுகம் மூன்று கொண்டது
குடமம்; குடமம் மூன்று கொண்டது கணம்; கணம் மூன்று கொண்டது வாகினி;
வாகினி மூன்று கொண்டது பிரதனை; பிரதனை மூன்று கொண்டது சமூ; சமூ
மூன்று கொண்டது அநீகினி; அநீகினி பத்துக் கொண்டது அக்குரோணி;
அக்குரோணி எட்டுக் கொண்டது ஏகம்; ஏகம் எட்டுக் கொண்டது கோடி;
கோடி எட்டுக் கொண்டது சங்கம்; சங்கம் எட்டுக் கொண்டது விந்தம்; விந்தம்
எட்டுக் கொண்டது குமுதம்; குமுதம் எட்டுக் கொண்டது பதுமம்; பதுமம்
எட்டுக் கொண்டது நாடு; நாடு எட்டு்க் கொண்டது சமுத்திரம்; சமுத்திரம்
எட்டுக் கொண்டது வெள்ளம் என்பர்.                              46