3834.'இந்திரன்தனிப் புதல்வன்,
     இன் அளிச்
சந்திரன் தழைத்தனைய
     தன்மையான்,
அந்தகன் தனக்கு
     அரிய ஆணையான்,
முந்தி வந்தனன்,
     இவனின் - மொய்ம்பினோய்!

     மொய்ம்பினோய் - வலிமை உடையவனே! இந்திரன் தனிப்
புதல்வன்-
இந்திரனின் ஒப்பற்ற மைந்தனாகிய அவ்வாலி; இன் அளிச்
சந்திரன் -
இனிமையும் குளிர்ச்சியும் கொண்ட சந்திரன்; தழைத்தனைய
தன்மையாள் -
அனைத்துக் கலைகளுடன் வளர்ச்சி பெற்றது போன்ற
வெண்ணிறத்தைஉடையவன்; அந்தகன் தனக்கு - யமனுக்கும்; அரிய
ஆணையான் -
கடத்தற்கரிய ஆணையை இடுபவன்; இவனின் - இந்தச்
சுக்கிரீவனுக்கு; முந்திவந்தனன் - முன்னே தமையனாகப் (ஒரு தாய்
வயிற்றில்) பிறந்தவன்.

     இதனால் வாலியின் மேனிநிறத்தையும், ஆணைச் சிறப்பையும்
உணர்த்தினான்.  எமனும் வாலியின் ஆணை வழியன்றிச் செயல்படான்
என்பதால் வாலியின் ஆற்றல் புலப்பட்டது.  வாலி சுக்கிரீவர்க்குத் தாய்
ஒருத்தி; தந்தையர் இந்திரனும் சூரியனுமாகிய இருவர். அந்தகன் தனக்கும் -
உயர்வு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது; தழைத்தனைய என்பதை
தழைத்தாலனைய என எச்சத் திரிபாகவாவது; தழைத்ததனைய என்பதன்
விகாரமாகவாவது கொள்க.  தம் வரலாற்றைத் தாமே கூறிக் கொள்வது
தகுதியன்று என்று கருத்துடன், இராமபிரான் வரலாற்றை இலக்குவன்
வாயிலாகவும், சுக்கிரீவன் வரலாற்றை அனுமன் வாயிலாகவும் கம்பர்
அமைத்துள்ள நயம் காண்க.                                   49