3836. | 'முட்டி நின்று, அவன் முரண் உரத்தின் நேர் ஒட்ட, அஞ்சி, நெஞ்சு உலைய ஓடினான்; ''வட்ட மண்டலத்து அரிது வாழ்வு'' எனா, எட்ட அரும் பெரும் பிலனுள் எய்தினான். |
முட்டி நின்று- (அவ்வரக்கன்) அவ்வாறு வாலியோடு எதிர்த்துப் போர் செய்த; அவன் முரண் உரத்தின் நேர் - அவனது வலிய ஆற்றலுக்கு எதிரில்; ஒட்ட அஞ்சி - நின்ற போர்செய்வதற்கு அஞ்சி; நெஞ்சு உலைய ஓடினான் - மனம் நடுங்கத் தப்பி ஓடினான்; வட்ட மண்டலத்து - வட்ட வடிவமாகிய பூமியில்; வாழ்வு அரிது - உயிர் வாழ்தல் அரிது; எனா - என்று எண்ணி; எட்ட அரும் பெரும்பிலனுள் - எவரும் செல்லுதற்கரிய பெரிய பிலத்துவாரத்துள்; எய்தினான் - புகுந்தான். வாலியுடன் போரிடுகையில் மாயாவி தன் வலிமை குறைந்து, வாலியின் வன்மை மிகுவதைக் கண்டதும் புறமுதுகு காட்டி ஓடிப் பின் பிலத்தினுள் நுழைந்து ஒளித்தான். மாயாவி நுழைந்த பிலத்தின் அருமை புலப்பட 'எட்டரும் பெரும்பிலன்' என்றான். பிலம் - பூமிக்குள் செல்லும் சுரங்கவழி. பிலன் - பிலம் என்பதன் ஈற்றுப்போலி. 51 |