3839. | 'அழுதுஅழுங்குறும் இவனை, அன்பினின் தொழுது இரந்து, ''நின் தொழில் இது; ஆதலால் எழுது வென்றியாய்! அரசு செய்க! '' என, ''பழுது இது'' என்றனன், பரியும் நெஞ்சினான். |
அழுது அழுங்குறும் - புலம்பி வருந்துகின்ற; இவனை - இச்சுக் கிரீவனை; அன்பினில் தொழுது இரந்து - (நாங்கள்) அன்போடு வணங்கி வேண்டி; எழுது வென்றியாய் - நூல்களில் எழுதத்தக்க வெற்றியை உடையவனே! நின்தொழில் இது ஆதலால் - இளவரசனாகிய நினக்குரிய தொழில் இவ்வரசு செய்தலே ஆதலின்; அரசு செய்க - அரசாட்சியை ஏற்றுக்கொள்வாயாக; என - என்று சொல்ல; பரியும் நெஞ்சினான்- (வாலியின் பிரிவால்) வருந்துகின்ற மனமுடையவனான சுக்கிரீவன்; இது பழுது- இது குற்றமாகும்; என்றனன் - என்று உரைத்தான். இரத்தல் - வேண்டுதல் பொருளில் வந்தது. நெடுநாள் கழிந்தும் வாலி மீண்டுவராததால், வாலிக்கு ஏதேனும் தீங்கு நேரிட்டதோ எனக் கருதியவராய், இளவரசனே அரசனுக்குப் பின்னர் அரசு பெற வேண்டும் என்ற முறைமை கருதி 'நின் தொழில் இது ஆதலால்' என்றனர். பழுது இது என்றது - வாலிக்கரிய அரசைத் தான் ஆளுதல் குற்றம் என்றது. இதனால் சுக்கிரீவனுக்கு அரசு புரியும் விருப்பமின்மை புலப்படும். எழுது வென்றியாய் - வெற்றித் தூண்களில் எழுதத்தக்க வென்றியை உடையவனே எனவும் பொருள் கொள்ளலாம். 'பழுது இது' என்று சுக்கிரீவன் கூறிய சுருக்கமான விடை 'சுருங்கச்சொல்லல்' எனும் அழகைச்சார்ந்தது. 54 |