3845.வாலி விசைத்து, வான்
     வளி நிமிர்ந்தெனக்
கால் விசைத்து, அவன்
     கடிதின் எற்றலும்,
நீல் நிறத்து விண்
     நெடு முகட்டவும்,
வேலை புக்கவும், பெரிய
     வெற்பு எலாம்.

     அவன்- அவ்வாலி; வால் விசைத்து- தன் வாலை வேகமாகத் தூக்கி;
வான் வளி நிமிர்ந்தென -
வானத்தின்கண் பெருங் காற்று எழுந்தாற்போல;
கால் விசைத்து -
தன் காலை வீசி; கடிதின் என்றலும்- வேகமாய் உதைத்த
அளவில்; பெரிய வெற்பு எலாம் - (பிலத்தை அடைத்திருந்த)  பெரிய
மலைகள் எல்லாம்; நீல் நிறத்து - நீல நிறமுடைய; விண் நெடு முகட்டவும்
-
ஆகாயத்தின் உயர்ந்த உச்சியை அடைந்தனவும்; வேலை புக்கவும் -
கடலில் விழுந்தனவும் ஆயின.

     ஆயின எனும் வினை வருவித்துக்கொள்ளப் பட்டது.  விசை - வேகம்.
நீலம் - நீல் என்றது கடைக்குறை.  முட்ட, புக்க என்பன பலவின்பால் குறிப்பு
வினை - யாலணையும் பெயர்கள்.

     வாலியின் காலால் உதைக்கப்பட்ட மலைகளில் உயரச் சென்றவை
விண்ணின் உச்சியை அடையவும், தாழச் சென்றவை கடலிலும் விழுந்தன.

     விசையுடன் ஒன்றைத் தாக்குகையில் விலங்குகள் தம் வாலை வேகமாக
நிமிர்த்துக்கொள்ளும் இயல்பு இங்குக் கூறப்பெற்றது.                  60