3849. | 'அடல் கடந்த தோள் அவனை அஞ்சி, வெங் குடல் கலங்கி, எம் குலம் ஒடுங்க, முன் கடல் கடைந்த அக் கரதலங்களால், உடல் கடைந்தனன்; இவன் உலைந்தனன். |
அடல் கடந்த தோள் - பகைவரின் வலிமையைப் போரில் கடந்து வெற்றிபெற்ற தோள்களை உடைய; அவனை அஞ்சி - வாலிக்குப் பயந்து; வெங்டல் கலங்கி - கொடிய குடல் கலங்கி; எம் குலம் ஒடுங்க - எம் வானர இனம் முழுமையும் அஞ்சி ஒடுங்கிநிற்க; முன் கடல் கடைந்த- முன்பு திருப்பாற்கடலைக் கடைந்த; அக்கரதலங்களால்- அந்தக் கைகளால்; உடல் கடைந்தனன் - (சுக்கிரீவனது) உடலைத் தாக்கிக் கலக்கினான் (வாலி); இவன் உலைந்தனன் - சுக்கிரீவன் பெரிதும் வருந்தினான். வாலியின் சினத்திற்குக் குரக்கினம் முழுவதும் குடல் கலங்கி அஞ்சி நடுங்கின. பாற்கடலைக் கடைந்த வாலியின் கைகளுக்குச் சுக்கிரீவன் உடம்பைக் கலக்குதல் எளிது. ஆதலின் 'கடல் கடைந்த அக்கரதலங்களால் உடல் கடைந்தனன்' என்றான். உடல் கடைதல் - உடம்பைத் தாக்கி உறுப்புகள் கலங்குமாறு செய்தல். கொடுமையான வார்த்தைகளைப் பேசியதோடு வாலி சுக்கிரீவனைத் தாக்கவும் செய்தான் என அவன் கொடுமையை இராமனுக்கு அனுமன் உணருமாறு கூறினான். உடல் கடைதல்; இதன்கண் அமைந்த (வினைப்) படிமம்கருதத்தக்கது. 64 |