3850. | 'பற்றி, அஞ்சலன் பழியை - வெஞ் சினம் முற்றி நின்ற, தன் முரண் வலிக் கையால், எற்றுவான் எடுத்து எழுதலும், பிழைத்து, அற்றம் ஒன்று பெற்ற, இவன், அகன்றனன். |
பற்றி - வாலி சுக்கிரீவனைப் பிடித்துக் கொண்டு; பழியை அஞ்சலன் - (தம்பியை வருத்துவதால் ஏற்படும்) பழிக்க அஞ்சாதவனாய்; வெஞ்சினம் முற்றிநின்ற - கொடிய கோபம் மிக்கு நின்ற; தன் முரண் வலிக்கையால் - தனது மிக்க வலிமையுடைய கையால்; எற்றுவான் - மோதுவதற்கு; எடுத்து எழுதலும் - உயரத் தூக்கி எழுந்த அளவில்; அற்றம் ஒன்று பெற்று - அவன் சோர்ந்திருக்கும் சமயம் ஒன்று பெற்று; இவன் பிழைத்து - இந்தச் சுக்கிரீவன் தப்பிப்பிழைத்து; அகன்றனன் - அவ்விடம் விட்டு அகன்று ஓடினான். வாலி, தன்னைப் பழிப்பரே என்ற எண்ணம் சிறிதுமின்றித் தன் தம்பியை மோதிக் கொல்ல, உயரே எடுத்த அளவில் சுக்கிரீவன் வாலி சிறிது அயர்ந்திருந்த சமயம் நோக்கித் தப்பி ஓடி வந்துவிட்டான் என்பதாம். முரண் வலி - ஒரு பொருட்பன்மொழி. மிக்க வலிமை. சுக்கிரீவனின் அச்சத்தைப் பிழைத்தால் போதுமென ஒடி அகன்ற நிலை உணர்த்தும். பழிக்கு அஞ்சாத வாலியின் கொடுமை உணர்த்தப்பட்டது. 65 |