3858. | 'உன்னினேன், உன்தன் உள்ளத்தின் உள்ளதை, உரவோய்! ''அன்ன வாலியைக் காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல் இன்ன வீரர்பால் இல்லை'' என்று அயிர்த்தனை; இனி, யான் சொன்ன கேட்டு, அவை கடைப்பிடிப்பாய்' எனச் சொன்னான். |
உரவோய் - வலிமை உடையவனே! உன்தன் உள்ளத்தின் - உன் மனத்தில்; உள்ளதை - உள்ள கருத்தை; உன்னினேன் - (யான்) ஊகித்து அறிந்து கொண்டேன்; அன்ன வாலியை - அத்தகைய வலிமை வாய்ந்த வாலியை; காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல் - யமனுக்குக் கொடுக்கும்படியான ஒப்பற்ற வலிமை; இன்ன வீரர்பால் இல்லை - இந்த வீரர்களிடத்தில் இல்லை; என்று அயிர்த்தனை - என்று ஐயம் கொண்டாய்; இனி யான் சொன்ன கேட்டு- இனி யான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு; அவை கடைப்பிடிப்பாய் - அவற்றை உறுதியாகக் கொள்வாய்; எனச் சொன்னான் - என்று சொல்வானாயினன். உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரவல்ல அனுமன் தன் அறிவால் சுக்கிரீவன் மனத்தில் கொண்ட ஐயத்தை உணர்ந்துகொண்டான். காலனுக்கு அளிப்பது - கொல்வது என்னும் பொருளைத் தருவது. அன்ன வாலி என்றது. எதிர்த்தார் வலிமையில் பாதியைத் தான் பெறுதற்குரிய வரம் பெற்ற வாலி என அவன் பெருமையைக் கூறியதாகும். இன்ன வீரர் - இங்கு வந்துள்ள இராமலக்குவரைக் குறிக்கும். யான் சொன்ன என்பதில் சொன்ன காலவழுவமைதி. 73 |