இராமனின் ஆற்றலைக் கண்டறிய அனுமன் உரைத்த உபாயம் 3863. | 'பிறிதும், அன்னவன் பெரு வலி ஆற்றலை, பெரியோய்! அறிதி என்னின், உண்டு உபாயமும்; அஃது அரு மரங்கள் நெறியில் நின்றன ஏழில், ஒன்று உருவ, இந் நெடியோன் பொறி கொள் வெஞ் சரம் போவது காண்!' எனப் புகன்றான். |
பெரியோய் - சுக்கிரீவப் பெரியோனே! பிறிதும்- மற்றும்; அன்னவன் பெருவலி ஆற்றலை - அந்த இராமனுடைய பெரிய வலிமைச் சிறப்பை; அறிதி என்னின் - அறிய விரும்புவாயானால்; உபாயமும் உண்டு - அதற்கு ஒரு வழி உள்ளது.; அஃது - அவ் உபாயமாவது; நெறியில் நின்றன - நாம் போகும் வழியில் நிற்பனவான; அருமரங்கள் ஏழில் - எய்துதற்கரிய மராமரங்கள் ஏழிற்; ஒன்று உருவ - ஒன்றைத் துளைக்கும்படி; இந்நெடியோன் - இந்த நெடியோனாகிய இராமனது; பொறி கொள் வெஞ்சரம் - நெருப்புப்பொறி கொண்ட கொடிய அம்பொன்று; போவது காண் - செல்வதே ஆகும்; எனப் புகன்றான் - என்று சொன்னான். மராமரங்கள் ஏழில் ஏதேனும் ஒரு மரத்தை ஊடுருவும் ஆற்றல் இராமன் அம்புக்கு உண்டாயின. அவ்வம்பு வாலியின் மார்பைத் துளைக்கும் ஆற்றலை உடையது என்பதைத் தெளியலாம் என்று சுக்கிரீவன் தெளியுமாறு சிறந்த உபாயத்தை அனுமன் உரைத்தனன். வலியாற்றல் - ஒரு பொருட்பன்மொழி; 78 |