3866. | மறு இலான் அது கூறலும், வானவர்க்கு இறைவன், முறுவல் செய்து, அவன் முன்னிய முயற்சியை உன்னி, எறுழ் வலித் தடந் தோள்களால் சிலையை நாண் ஏற்றி, அறிவினால் அளப்ப அரியவற்று அருகு சென்று, அணைந்தான். |
மறுஇலான் - (மனத்தில்) குற்றம் இல்லாதவனாம் சுக்கிரீவன்; அது கூறலும் - அவ்வார்த்தையைச் சொன்னதும்; வானவர்க்கு இறைவன் - தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய இராமபிரான்; அவன் முன்னிய முயற்சியை உன்னி - சுக்கிரீவன் எண்ணிய காரியத்தை அறிந்து கொண்டு; முறுவல் செய்து - புன் முறுவல் செய்து; எறுழ் வலித் தடந் தோள்களால் - மிக்க வலிமையுடைய பெரிய கைகளால்; சிலையை நாண் ஏற்றி - வில்லை எடுத்து நாண் ஏற்றி; அறிவினால் அளப்பு அரியவற்று - அறிவினால் அளவிட்டு அறிய முடியாத அம்மரங்களின்; அருகு சென்று - அருகில் சென்று; அணைந்தான் - சேர்ந்தான். சுக்கிரீவன் தன் உள்ளத்தில் ஏற்பட்ட ஐயத்தை மறைக்காமல் வெளியிட்டமையால் 'மறுவிலான்' எனச் சிறப்பிக்கப்பட்டான். இராமன் தேவர்களுக்குத் தலைவனாகிய திருமாலின் அவதாரம் ஆதலின் 'வானவர்க்கு இறைவன்' என்றார். இராமனைத் 'தெய்வநாயகன்' (6994) என அங்கதனும், ''தேவதேவனைத் தென்னிலங்கை எரியெழச் செற்றவில்லியை'' (திருவாய்மொழி - 3-6-2) என நம்மாழ்வாரும் கூறியமை காண்க. இராமன் வலிமைக்கு மராமரம் துளைத்தல் மிக எளிய காரியமாதலின், சுக்கிரீவன் மனத்தில் அச்சத்தால் ஏற்பட்ட ஐயத்தை உய்த்துணர்ந்து இராமன் முறுவல் செய்தான். எறுழ் - வலிமை; எறுழ் வலி - ஒரு பொருட்பன்மொழி. அரியவற்று - 'அற்று' - சாரியை. மராமரங்களின் உயர்வும், பருமையும், பரப்பும் மக்கள் அறிவால் அளக்க முடியாதன ஆதலின் 'அறிவினால் அளப்பரியவற்று' என்றார். 2 |