3872. | நாற்றம் மல்கு போது, அடை, கனி, காய், முதல் நானா வீற்று, மண்தலத்து யாவையும் வீழ்கில, யாண்டும் காற்று அலம்பினும்; கலி நெடு வானிடைக் கலந்த ஆற்றின் வீழ்ந்து போய், அலை கடல் பாய்தரும் இயல்ப; |
காற்று அலம்பினும் - காற்று அசைத்தாலும்; நாற்றம் மல்கு போது- நறுமணம் மிக்க மலர்களும்; அடை கனி காய் முதல் - இலைகளும், பழங்களும், காய்களும் முதலிய; நானா வீற்று யாவையும் - பலவகைப்பட்ட அனைத்தும்; மண் தலத்து - மண்ணுலகில்; யாண்டும் வீழ்கில - எவ்விடத்திலும் விழாதனவாய்; கலி நெடு வானிடை- ஆரவாரத்தை உடைய பெரிய வானுலகத்தில்; கலந்த - பொருந்திய; ஆற்றின் வீழ்ந்து போய் - ஆகாய கங்கையில் விழுந்து (அதன் வழியாகச்) சன்று; அலைகடல் பாய்தரும் - அலைகளை உடைய கடலில் சேர்கின்ற; இயல்ப- தன்மையை உடையன. இதனால் அம்மரங்கள் ஆகாய கங்கையினும் உயர்ந்துள்ளன என்றவாறு; உயர்வு நவிற்சி அணி. நாற்றம் - இங்கு நறுமணம்; ஆறு - ஆகாய கங்கை. 'நறுமணம் மிக்க மலர், இலை, கனி, காய் முதலிய பல்வகைப்பட்ட அனைத்தும் எக்காலத்தும் வெவ்வேறு மண்டலங்களில் வீழ்வன அல்ல; காற்றடித்து வீழ்ந்தாலும் ஆரவாரமுடைய ஆகாயத்தில் பொருந்திய ஆகாய கங்கையில் விழுந்து கடலைச் சேர்வன' என்றும் இப்பாடலுக்கு விளக்கம்கூறுவர். 8 |