3873.அடியினால் உலகு அளந்தவன்
     அண்டத்துக்கு அப்பால்
முடியின்மேல் சென்ற முடியன
     ஆதலின், முடியா
நெடிய மால் எனும்
     நிலையன; நீரிடைக் கிடந்த
படியின்மேல் நின்ற மேரு
     மால் வரையினும், பரிய;

     அடியினால் - தன் திருவடியினால்; உலகு அளந்தவன் - உலகங்
களை அளந்தவனான திருமாலின்; அண்டத்துக்கு அப்பால் - அண்
டத்திற்கு அப்பால் உள்ள; முடியின் மேல் சென்ற - உச்சி முகட்டின்
மேலாக வளர்ந்து சென்ற; முடியன ஆதலின் - உச்சியினை உடையன
ஆதலால்; முடியா - அளவிட முடியாத; நெடிய மால் எனும் - (விக்
கிரமாவதாரங் கொண்ட) நெடிய திருமால் என்று சொல்லத் தக்க; நிலையன-
நிலைமையை உடையன.  நீர் இடைக்கிடந்த - கடல் நீரில் கிடந்த -
படியின் மேல் நின்ற-
பூமியின் நடுவில் நிற்கின்ற; மேரு மால் வரையினும்
-
பெரிய மேருமலையைக் காட்டிலும்; பரிய - பருமையை உடையன.

     மரங்கள் திருமாலுக்குரிய உலகினையும் கடந்து வளர்ந்து
இருந்தமையால், அவை திரிவிக்கிரமனாய் வளர்ந்த திருமாலை ஒத்து
விளங்கின.  திரிவிக்கிரமனின் பெருமையை 'படிவட்டத் தாமரை பண்டுலகம்
நீரேற்று, அடிவட்டத்தால் அளப்ப நீண்ட - முடிவட்டம், ஆகாயம் ஊடறுத்து
அண்டம் போய் நீண்டதே, மாகாயமாய் நின்ற மாற்கு' என்று பாடுவர்
பேயாழ்வார் (மூன்றாந் திருவந்தாதி - 13) நீரிடைக் கிடந்தபடி - நீரிடத்தில்
தோன்றிய பூமி என்பதன் பொருள்.  பூமியின் நடுவில் பொன்மயமாய்
மேருமலை நிற்பதாகவும் சூரியன் உதயமும் மறைவும் அம்மலையால்
ஏற்படுகின்றன என்றும் பௌராணிகர் உரைப்பர்.  அத்தகைய
மேருமலையினும் பரிய எனக் கூறி மரங்களின் பருமை உணர்த்தப்பட்டது.  9