3875. | சென்று திக்கினை அளந்தன, பணைகளின்; தேவர், 'என்றும் நிற்கும்' என்று இசைப்பன; இரு சுடர் திரியும் குன்றினுக்கு உயர்ந்து அகன்றன; ஒன்றினும் குறுகா; ஒன்றினுக்கு ஒன்றின் இடை, நெடிது யோசனை உடைய. |
பணைகளின் - கிளைகளால்; சென்று - (அம்மரங்கள்) வளர்ந்து போய்; திக்கினை அளந்தன - எல்லாத் திசைகளையும் அளந்தன; என்றும் நிற்கும் என்று - எக்காலத்தும் அழியாமல் நிற்பவை என்று; தேவர் - தேவர்களால்; இசைப்பன - சொல்லத்தக்கன; இருசுடர் - சூரிய சந்திரர்; திரியும் குன்றினுக்கு- வலம் வரும் மேருமலையை விட; உயர்ந்து, அகன்றன - உயர்ந்தும், அகன்றும் விளங்கின; ஒன்றினும் குறுகா - ஒரு வகையிலும் குறைவு படாதன; ஒன்றினுக்கு ஒன்றின் இடை - ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் இடையிலே; நெடிது யோசனை உடைய- பல யோசனை தூரம் இடைவெளி உள்ளவை. உயர்ந்தும் பரந்தும் வளர்ந்த மரங்கள் நெருக்கமாக இன்றி இடைவெளி விட்டு வளர்ந்திருக்கின்றன. திக்கினை அளந்தன என்பதற்குத் திசைகளின் எல்லை அளவும் பரந்துள்ளன என்பது பொருள். யோசனை ஓரெல்லை அளவைக் குறிக்கும். நான்கு காததூரம் என்றுகூறுவர். 11 |