3878.அரிந்தமன் சிலை நாண்
     நெடிது ஆர்த்தலும், அமரர்
இரிந்து நீங்கினர், கற்பத்தின்
     இறுதி என்று அயிர்த்தார்;
பரிந்த தம்பியே பாங்கு
     நின்றான்; மற்றைப் பல்லோர்
புரிந்த தன்மையை உரைசெயின்,
     பழி, அவர்ப் புணரும்.

     அரிந்த மன் - பாவத்தைப் போக்குவோனாகிய இராமனுடைய; சிலை
நாண் -
வில்லின் நாண்; நெடிது ஆர்த்தலும் - மிகுதியால் ஆரவாரிக்கவும்;
அமரர் -
தேவர்கள்; கற்பகத்தின் இறுதி என்று - கல்ப காலத்தின் முடிவு
இப்பொழுது என்று; அயிர்த்தார் - ஐயம் கொண்டவர்களாய்; இரிந்து
நீங்கினர் -
தத்தம் இடங்களிலிருந்து நிலை கெட்டு நீங்கினர்; பரிந்த
தம்பியே
- இராமன் மாட்டு அன்பு கொண்ட தம்பி இலக்குவன் மட்டுமே;
பாங்கு நின்றான் -
இராமன் அருகே நின்றவன் ஆனான்; மற்றைப்
பல்லோர் -
மற்றுமுள்ள சுக்கிரீவன் அனுமன் முதலிய பலரும்; புரிந்த
தன்மையை
- அடைந்த நிலையை; உரை செயின் - சொல்லத்
தொடங்கினால்; பழி அவர்ப் புணரும் - அவர்களுக்குப் பழிவந்து சேரும்.

     இராமன் வில்லின் நாணொலி தேவர்களையும் அச்சுறுத்தியதால்,
அவர்கள் யுகமுடிவு வந்துற்றதோ என ஐயுற்று அஞ்சி ஓடினர்.  வானரர்களோ
ஒலியைக் கேட்ட மாத்திரத்தில் நிலை குலைந்து அஞ்சிய நிலை சொல்ல
முடியாத அளவில் இருந்தது.  எள்ளற்குரிய நிலைகளை அவர்கள்
அடைந்தமையால் அவற்றைக் கவிஞர் சொல்லாது விடுத்தார்.  இராமன்
தொடுக்கும் வில்லின் நாண் ஒலியைப் பன்முறை கேட்டிருப்பதாலும்
வீரமுடையவன் ஆதலினாலும் இலக்குவன் அஞ்சாது இராமன் அருகே
நின்றனன் என்க.  நாண் ஒலியின் சிறப்பை 'ஆண்தகை நாண் இனிது
ஏற்றினான், நடுங்கிற்று உம்பரே' (725), ''சிலை கொள் நாண் நெடிய கோதை
ஒலி ஏறு, திரை நீர், மலைகள், நீடுதலம், நாகர்பிலம், வானம் முதல் ஆம்
உலகம் ஏழும் உரும் ஏறு என ஒலித்து உரறவே'' (2539) என்ற அடிகளும்
உணர்த்தும்.  அரிந்தமன் - பகைவர்களை அடக்குபவன் என்றும் பொருள்
கொள்வர்.  தம்பியே - ஏகாரம்பிரிநிலை.                          14