துந்துபியின் வரலாறு

3888.'துந்துபிப் பெயருடைச் சுடு
     சினத்து அவுணன், மீது
இந்துவைத் தொட நிமிர்ந்து
     எழு மருப்பு இணையினான்,
மந்தரக் கிரி எனப்
     பெரியவன், மகர நீர்
சிந்திட, கரு நிறத்து
     அரியினைத் தேடுவான்.

     மீது இந்துவைத் தொட - மேலே (வானில்) உள்ள சந்திரனைத்
தொடும்படியாக; நிமிர்ந்து எழு - மேலெழுந்து வளர்ந்துள்ள; மருப்பு
இணையினான் -
இரண்டு கொம்புகளை உடையவனும்; மந்தரக்கிரி எனப்
பெரியவன் -
மந்தர மலை போன்ற பெரிய உருவத்தை உடைய வனுமான;
துந்துபிப் பெயருடை -
துந்துபி என்னும் பெயருடைய; சுடு சினத்து
அவுணன் -
தீப்போல் சுடுகின்ற கோபத்தை உடைய அசுரன்; மகர நீர்
சிந்திட -
கடலில் உள்ள நீர் சிதறும் படியாக; கரு நிறத்து அரியினை -
கரிய நிறத்தை உடைய திருமாலை; தேடுவான் - தேடிச் சென்றான்.

     முன் பாடலில் 'மயிடமோ' என்றதாலும் இங்கு 'மருப்பிணையினான்'
என்றதாலும் 'துந்துபி' எருமை வடிவினன் என்பது புலனாகும்.  'மகரநீர்
சிந்திட' என்றதால் கடலைக் கலக்கிக் கொண்டு தேடினான்' என்பது
பெறப்படுகிறது.  எருமையின் இயல்பிற்கேற்ப நீரைக் கலக்கினான் என
அறியலாம்.                                                3