3889.'அங்கு வந்து அரி எதிர்ந்து,
     ''அமைதி ஏன்? '' என்றலும்,
''பொங்கு வெஞ் செருவினில்
     பொருதி'' என்று உரைசெய,
''கங்கையின் கணவன், அக்
     கறை மிடற்று இறைவனே
உங்கள் வெங் கத வலிக்கு
     ஒருவன்'' என்று உரை செய்தான்.

     அங்கு - அவ்விடத்தில்; அரி வந்து எதிர்ந்து - திருமால் எதிரில்
வந்து; அமைதி என் என்றலும் - 'நீ இங்கு வந்த காரணம் யாது' என்று
வினவிய அளவில்; பொங்கு வெஞ் செருவினில் - சீற்றம் கொண்டு
செய்கின்ற கொடிய போரில்; பொருதி என்று உரை செய் - 'என்னோடு
போர் செய்வாயாக என்று துந்துபி கூற; கங்கையின் கணவன் - (அதற்குத்
திருமால்) 'கங்கா தேவியின் கணவனான; அக்கறை மிடற்று இறைவனை -
நஞ்சுண்டதால் கறுத்த கண்டத்தை உடைய அந்தச் சிவபெருமானே; உங்கள்
வெம்கதம் வலிக்கு -
உங்ககளப் போன்றவர்களின் கோபமிக்க வலிமைக்கு;
ஒருவன் -
போரிடக்கூடிய ஒருவன் ஆவான'; என்று உரை செய்தான் -
என்று உரைத்தான்.

     வாலியால் துந்துபி கொல்லப்படவேண்டும் என்பது ஊழ்வினையாதலால்,
திருமால் அவனொடு போர் செய்து கொல்லாது இங்ஙனம் கூறினார் எனக்
கொள்க.  கங்கையைச் சிவபிரான் தன் தலையில் கொண்டமையால்
'கங்கையின் கணவன்' எனப்பட்டான். இறைவனே ஏகாரம் பிரிநிலை.      4