3892. | 'அன்னவன் விட, உவந்து அவனும் வந்து, ''அரிகள்தம் மன்னவன்! வருக! போர் செய்க!'' எனா, மலையினைச் சின்ன பின்னம் படுத்திடுதலும், சினவி, என் முன்னவன், முன்னர் வந்து அனையவன் முனைதலும், |
அன்னவன் விட - அத்தேவேந்திரன் அனுப்பிவிட; அவனும் உவந்து வந்து - அந்தத் துந்துபியும் மகிழ்ந்து கிட்கிந்தைக்கு வந்து; அரிகள் தம் மன்னவன் - குரங்குகளுககு அரசனே!வருக போர் செய்க - வந்து என்னோடு போர் செய்வாயாக; எனா - என்று சொல்லிக் கொண்டு; மலையினை - அம்மலையை; சின்ன பின்னம் படுத்திடுதலும் - பலவாறு நாசப்படுத்துகையில்; என் முன்னவன் சினவி - என் தமையனான வாலி சினங் கொண்டு; முன்னர் வந்து - எதிரில் வந்து; அனையவன் முனைதலும் - அந்த அசுரனோடு போர் செய்த அளவில். . . . 'முனைதலும்' என்பது அடுத்த பாடலில் வரும் 'உணர்ந்திலர்' என்பதனோடு முடியும் அன்னவன் - அகரச்சுட்டு அடியாக வந்த சொல். தேவேந்திரன் சொற்படியே துந்துபி வாலியிடம் சென்று போருக்கு அழைக்க இருவரும் போர் புரியலாயினர் என்பதாம். 7 |