3893. | 'இருவரும் திரிவுறும் பொழுதின் இன்னவர்கள் என்று ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள்; எவ்உலகினும், வெருவரும் தகைவுஇலர், விழுவர், நின்று எழுவரால்; மருவஅருந்தகையர், தானவர்கள் வானவர்கள்தாம். |
இருவரும்- வாலி, துந்துபி ஆகிய இருவரும்; திரிவுறும் பொழுதின் - இடசாரி, வலசாரியாகச் சுழலும் போதில்; இன்னவர்கள் என்று- இவர்கள் இன்னார் என்று; ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள் - எவரும்சிறிதும் அறிந்திலர்; எவ் உலகினும் - எந்த உலகிலும்; வெருவரும் தகைவு இலர் - (எவரைக் கண்டும்) அஞ்சும் தன்மையில்லாத இவர்கள்; விழுவர் - கீழே விழுவார்கள்; நின்று எழுவர் - (மீண்டும்) எழுந்து நிற்பார்கள்; தானவர் - அசுரர்களும்; வானவர்கள் தாம் - தேவர்களும்; மருவ அருந்தகையர் - அருகே நெருங்கவும் முடியாத தன்மையினர் ஆயினர். இன்னவர்கள் என்று சிறிதும் உணர்ந்திலர்கள் - இவன் தான் வாலி, என்றும் இவன் தான் துந்துபி என்றும் அறிய முடியாமையை உணர்த்திற்று. அவ்விருவரின் உருவத்தின் பெருமையாலும் போரிடும் வேகத்தாலும் இட, வலமாகச் சுழல்வதாலும் அடையாளம் தெரிந்திலது. உணர்ந்திலர்கள் - விகுதி மேல் விகுதி (அர், கள்). துந்துபியின் இனத்தவர் ஆதலின் 'தானவர்' முன்னர்க் கூறப்பட்டனர். 8 |